Spotlightசினிமா

காதல் ஓர் உணர்வு… ’தடயம்’ எடுத்து வைத்த தடம்!

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான்.

அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, தாளா பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம் தான் தடயம்.

இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர்கள் சமுத்திரகனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறார். மேலும் பல மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளியான “தடயம்” சிறுகதையே இந்தப் படத்தின் கரு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்திருக்கிறார். “அபிநயா” குழுவில் பயிற்சி பெற்ற இவர், 2000 முதல் 2006 வரை வசந்தசேனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். “பாரத் ரங் மகோத்சவ்” தேசிய திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்திருக்கிறார்.

நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார். நான்கு வருடங்கள் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகராக இருந்த இவர், இருபதிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இசையமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

முழுக்க முழுக்க “கிரவுட் ஃபண்டிங்” தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியிருக்கும் “தடயம்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button