
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் தான் ராயன். இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஓம் பிரகாஷ்.
மேலும், இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கதைக்குள் பயணிக்கலாம்…
தென் தமிழகத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. நான்கு குழந்தைகளுடன் ஏழ்மை வாழ்க்கை வருகின்றனர் ஒரு தம்பதியினர். ஊருக்குச் சென்று வருவதாக கூறிச் செல்லும் பெற்றோர் வீட்டிற்கு திரும்பவில்லை.
நால்வரில் மூத்தவரான ராயன், தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். அங்கு கடுமையாக உழைத்து தம்பிகள் மற்றும் தங்கையை வளர்க்கிறார்.
ராயனாக வருபவர் தான் தனுஷ். இவரது தம்பிகளாக வருபவர்கள் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம். தங்கையாக வருபவர் துஷாரா விஜயன்.
அதே ஏரியாவில் இரண்டு கேங் இருக்கிறது. சரவணன் கேங் மற்றும் எஸ் ஜே சூர்யா கேங்.
எஸ் ஜே சூர்யாவின் தந்தையை சரவணன் கொன்று விட, சரவணனை கொல்ல எஸ் ஜே சூர்யா காத்திருக்கிறார்.
இவர்கள் இருவரின் சண்டையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போலீஸ் உயரதிகாரியான பிரகாஷ்ராஜ்.
இந்த சூழலில், சரவணனின் மகனை சந்தீப் குடி போதையில்கொன்று விடுகிறார். இதனால் கோபமடையும் சரவணன், சந்தீப்பை கொல்ல நினைக்கிறார்.
தம்பிக்காக சரவணனை கொன்று விடுகிறார் தனுஷ். தனுஷின் இந்த வெறியைக் கண்ட எஸ் ஜே சூர்யா, தன்னுடைய கேங்கில் வந்து சேர சொல்ல, அதை தவிர்த்து தனது குடும்பம் தான் முக்கியம் என்று எஸ் ஜே சூர்யாவை விட்டு ஒதுங்குகிறார்.
ஆனால், எஸ் ஜே சூர்யா தொடர்ந்து தனுஷிற்கு இன்னல்களை கொடுத்து வருகிறார். எஸ் ஜே சூர்யாவை எப்படி தனுஷ் சமாளித்தார்..?? துஷாராவின் திருமணத்தை தனுஷ் செய்து முடித்தாரா .??? என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றுவிட்டாலும், தனுஷின் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் படம் பார்க்கும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனுஷிற்குள்ளும் ஒரு சோகம், கோபம், வெறி என இருக்கலாம் என்று எண்ணத்தை தோன்ற வைத்தாலும், எதற்காக அப்படி இருக்கிறார் என்ற தெளிவை இயக்குனரான தனுஷ் கொடுக்கவில்லை.
ஆக்ஷனில் அதிரடி காட்டியிருந்தாலும், இந்த கதைக்கு இவ்வளவு ரத்த வெறி தேவையில்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.
சந்தீப்பின் கதாபாத்திரம் ஓகே ரகம் தான். இவரை ஹீரோவாக பார்த்து பார்த்து பழகியதால், வில்லனாக ஏற்றுக் கொள்ளும் சூழலை தனுஷ் ஏற்படுத்த தவறியிருக்கிறார்.
சின்ன ரோல் என்றாலும் ஓகே தான் என்று ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்திருப்பார் போலும் காளிதாஸ் ஜெயராம். அண்ணன் தம்பிகளுக்கிடையேயான ஒரு பாசத்தை ஒரு இடத்திலாவது வெளிப்படுத்தும்படி வைத்திருந்திருக்கலாம்.
துஷாராவிற்கு பெரிய ஸ்கோப் இருந்தாலும், அதை தாங்கிக் கொண்டாரா என்ற சந்தேகம் இருக்கதான் செய்கிறது. வில்லனாக எஸ் ஜே சூர்யா இப்படத்தில் தப்பான் சாய்ஸ். சரவணனின் கேரக்டர் படத்தில் மிகப்பெரும் வெயிட்டேஜ்..
இப்படியான ஒரு கதைக்கு இப்படியொரு ரத்த வெறி தேவையில்லையே என்று தான் படம் முழுக்க கேட்க தூண்டியது.
ஏ ஆர் ரகுமான் ஒருவரே படத்திற்கு மிகப்பெரும் பலம். பின்னணி இசையில் படத்தினை ஓரளவிற்கு தாங்கி நிற்க வைத்திருக்கிறார்.
உசுரே நீதானே நீதானே என்ற பாடலின் வரியை காட்சிப்படுத்தியதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். ட்ரெய்லர் பார்த்ததோடு இருந்திருக்கலாமோ படத்திற்கு போகாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை நமக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் தனுஷ்.
முதல் பாதி முழுக்க முழுக்க அப்பட்டமான பாட்ஷா படத்தின் சாயல் இருந்ததை பார்க்க முடிந்தது. இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் என்று சொல்லி கதையை திருப்பியது பெரும் சறுக்கலை கொடுத்துவிட்டது. தனுஷ் கோட்டை விட்டுவிட்டார்.
மொத்தத்தில்,
ராயன் – ஏமாற்றம்



