கதை முழுக்க முழுக்க கொடைக்கானலில் பயணமாகிறது. நான்கு இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வருகின்றனர்.
அவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜ்க்கு எதிராக ஒரு டாக்டர் குடும்பமும் தங்குகின்றனர்.
டாக்டர் தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். நான்கு இளைஞர்களுக்கும் டாக்டர் குடும்பத்திற்கும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இதனால் டாக்டரும், நான்கு இளைஞர்களும் இரவில் மது விருந்தில் கலந்து கொள்கின்றனர்.
அடுத்தநாள் காலை விடியலில் நான்கு இளைஞர்களில் ஒருவரும் 12 வயது மகளும் மாயமாகின்றனர்.
இதற்கு பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது க்ளைமாக்ஸ்…
சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் இவர்களிடம் இன்னும் சற்று அதிகமான நடிப்பை வாங்கியிருந்திருக்கலாம்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.
படத்திற்கு சற்று உயிர் கொடுத்ததே ஜான் விஜய் தான் என்று கூறலாம்.
அறிமுக இயக்குனர் எஸ் சுரேஷ் குமார் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். முதல் படத்திற்கு நல்லதொரு முயற்சி என்றாலும், விடாப்பிடியாக இருந்து கதையின் ஓட்டத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சற்று அதிகமாகவே அனைவரையும் அரவணைத்திருக்கும் இந்த அகடு.
க்ளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து இயக்குனர் தப்பித்துக் கொண்டார்.
நல்ல ஒரு ஒன்லைன் கையில் எடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இருவருமே சிறப்பாக தங்களது வேலைகளை செய்திருக்கின்றனர்.
அகடு – அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.. படம் பாருங்கள் புரிந்து கொள்ளலாம்…