
இயக்கம்: கிருஷ்ணா சங்கர்
நடிகர்கள்: Varalaxmi Sarathkumar, Suhasini Maniratnam, Sruthi Hariharan, Vidyulekha Raman, Prakash Mohandas
இசை: ஆதித்யா ராவ்
ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா
தயாரிப்பு: Agni Entertainment Presents
கதைப்படி,
அமெரிக்காவில் எலிசாவை (சுஹாசினி மணிரத்னம்) கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் நம்ருதா(ஸ்ருதி ஹரிஹரன்).
நம்ருதாவின் கணவராக வருபவர் வருண் (பிரகாஷ் மோகன் தாஸ்). நீதிமன்றத்தில் வழக்கானது வர, நம்ருதாவிற்காக ஆஜராகிறார் வக்கீல் மாயா (வரலக்ஷ்மி சரத்குமார்).
கதை அவ்வப்போது ப்ளாஷ் பேக் சென்று வருகிறது. சுமார் 200 மில்லியன் டாலர் சொத்து மதிப்பிற்கு சொந்தக்காரர் எலிசா. நோயோடு தனிமையில் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் எதேச்சையாக நம்ருதாவை எலிசா சந்திக்க, இருவரும் நெருங்கி பழகுகின்றனர்.
அம்மா – மகள் கொண்ட உறவாக இருவரும் பழக, தனது சொத்தில் அநேக பங்குகளை நம்ருதாவின் பெயரில் எழுதி வைக்கிறார் எலிசா. ஒருநாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு எலிசா இறந்து விடுகிறார். இறப்பில் சந்தேகிக்கும் போலீஸார், ஒரு சிலரின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு நம்ருதா தான் கொலை செய்திருக்கிறார் என்று கைது செய்கின்றனர்.
இறுதியில், எலிசாவை கொன்றது யார்.? நம்ருதா இந்த கொலைப் பழியில் இருந்து தப்பித்தாரா இல்லையா.? இதற்கு பின்னால் நடக்கும் மர்மம் தான் என்ன.??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகியாக படம் முழுக்க நம்மை பெரிதாகவே கவர்ந்திருக்கிறார் நாயகி ஸ்ருதி ஹரிஹரன். அனைவருக்கும் பிடித்தமான புன்னகையால் அனைவரையும் கவரும் முகமாக வந்து செல்கிறார் ஸ்ருதி.
ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்திக் கொண்டே செல்கிறார். அதிலும், தனக்கும் சுஹாசினிக்கும் இருக்கும் அந்த உறவைக் கூறும் இடத்தில் நம் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டார் ஸ்ருதி.
தனது அனுபவ நடிப்பால், தனது கதாபாத்திரத்தில் ஓங்கி நிற்கிறார் சுஹாசினி மணிரத்னம்
படபடவென பட்டாசு வெடித்தாற்போல் தனது கதாபாத்திரத்தை மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக தனது கேரக்டரை சரியாக செய்து முடித்திருக்கிறார். வழக்கு விசாரணையை நடத்தும் விதம் அருமை…
ஸ்ருதி ஹரிஹரனின் கணவராக நடித்த பிரகாஷ் மோகன் தாஸ், மிகவும் இயல்பாக தனது கேரக்டரை செய்து முடித்துவிட்டார். மிகவும் அப்பாவித்தனமான ஒரு முகம் கொண்டு தனது கேரக்டரில் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
வித்யுலேகாவும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஒரு ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தரமான கோர்ட் ட்ராமா படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சங்கர். படத்தின் ஆரம்பத்தில் கதைக்குள் நம்மை கொண்டு செல்ல சற்று சிரமப்பட்டாலும், கதை நகர நகர நம்மையும் கதையோடு பயணிக்க வைத்துவிட்டார் கிருஷ்ணா சங்கர்.
கோர்ட் ட்ராமாவில் நடத்தப்பட்ட விசாரணை, அதைக் காட்சிப்படுத்திய விதம் என அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதுசு தான்.
இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் நம்மை பரபரப்பின் உச்சத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
பின்னணி இசையில் ஆதித்யா ராவ் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம்.
தமிழ் சினிமா தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா அல்லது ஹாலிவுட் படம் பார்த்துக் கொண்டிருகிறோமா என்று நம்மை யோசிக்க வைக்கும் அளவிற்கான தரமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா.
மொத்தத்தில்,
The Verdict – பரபரப்பு..




