
எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் ரஃபிக் இஸ்மாயில் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “இரத்தசாட்சி”. கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரீஷ் குமார், நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பால நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.
கதைப்படி,
1980களில் நடக்கும் ஒரு சம்பவம். பட்டதாரியான கண்ணா ரவி, தனது பகுதி மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுப்பவர். அப்படியாக, பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யும் முதலாளி ஒருவர், நூற்றுக்கணக்கானவரை கொத்தடிமைகளாக வைத்து அங்கு வேலை செய்து வருகிறார்.
அப்போது, சிறு வெல்லம் எடுத்ததற்காக அந்த முதலாளி, ஒரு இளம்பெண்ணை கொன்று விடுகிறார். காவல்துறை வழக்கம்போல், முதலாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு நீதியின் கண்களை மூடி மறைக்கிறது.
அச்சமயத்தில் வரும் கண்ணாரவி, அங்கு இருக்கும் மக்களிடம் உங்கள் உரிமை எவரிடமும் இல்லை உங்களிடம் மட்டுமே உள்ளது என்று பேச, கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீண்டெழுந்து அங்கு இருந்து வெளியே வருகின்றனர்.
கண்ணா ரவி மற்றும் சிலரை நக்சல்களாக முத்திரைக் குத்தி தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கிறார்கள் காவல்துறையினர்.
தனது நண்பனை கொன்றதுக்காக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை படுகொலை செய்கிறார் கண்ணா ரவி… இதனால், போலீஸார் கண்ணா ரவியை பிடிப்பதற்கான தேடும் பணியை தீவிரப்படுத்துகிறது. இதனால், போலீஸார் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து இன்னல்கள் கொடுத்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் தங்கியிருக்கும் கண்ணாரவியை பிடிக்க மெட்ராஸ் வினோத் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் செல்கின்றனர்.
இறுதியில் கண்ணா ரவிக்கு என்ன ஆனது.? என்பது தான் படத்தின் மீதிக் கதை…
தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்து வரும் கண்ணா ரவி, இப்படத்திலும் தனது அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகளை அள்ளுகிறார். மிகப்பெரும் வசனத்தை பேசி, மக்கள் மனதில் வீரத்தைத் தூண்டும் இடமாக இருக்கட்டும், க்ளைமாக்ஸில் இவர் செய்யத் துணிந்த அந்த ஒரு காட்சியாக இருக்கட்டும் இரண்டுமே அப்ளாஷ்… வேற லெவல் கண்ணா ரவி சார்..
இளங்கோ குமரவேல் மற்றும் மெட்ராஸ் வினோத் வழக்கம்போல் இருவரும் கேரக்டர்களாகவே வாழ்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான போலீஸ் எஸ் பி ஆக நடித்திருக்கும் கல்யாண் மாஸ்டர், மிகப் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். மிகவும் யதார்த்தமாக நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் கல்யாண். உயர் பதவியில் இருப்பவர்கள் இப்படிதான் பேசுவார்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள் என்று அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
ஆறு பாலாவும் தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
அந்த காலக்கட்டத்தில் “அப்பு”வோடு(கண்ணா ரவி) வாழ்ந்து வந்தது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ரஃபிக் இஸ்மாயில். ஆரம்பம் முதல் இறுதி வரை கதையில் ஒரு உயிரோட்டத்தைக் கொடுத்து க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விட்டார்.
காட்சிகளின் நகர்வு, வசனம் என ஒவ்வொரு இடத்திலும் முத்திரை குத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஜெகதீஸ் ரவியின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலத்திற்கே இழுத்துச் சென்று விட்டது. போலீஸ் ஸ்டேஷனின் சண்டைக் காட்சி கவனம் ஈர்க்கிறது.
ரியாஸ் அவர்களின் பாடல்கள் கவர்கின்றன. அதிலும், கொடிச்சிமார் நிலமே என்ற மனதை உருக்கும் பாடல் கண்கலங்க வைக்கின்றன.
வாய் பேச முடியாதவராக நடித்தவர் மற்றும் கண்ணா ரவிக்கு உதவி செய்த அந்த பெண் இருவரும் இக்கதையில் முக்கியமாக தனிக்கவனம் ஈர்த்தவர்கள்.
இரத்தசாட்சி – உழைக்கும் மக்களின் குரலான ஒருவனின் இரத்தச் சரித்திரம்…





