குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சாகுந்தலம். தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகியிருக்கிறது.
கதைப்படி,
விசுவாமித்ரர் மற்றும் மேனகாவிற்கு பிறக்கும் குழந்தையானது பூமியிலேயே விடப்படுகிறது. அக்குழந்தையை ரிஷி ஒருவர் எடுத்து “சாகுந்தலா” எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்து வருகிறார்.
வருடங்கள் உருண்டோடுகிறது. விலங்குகளை வேட்டையாட வரும் மன்னரான துஷ்யந்த், அங்கிருந்த சாகுந்தலாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
சமந்தாவிற்கும் அவர் மீது காதல் ஏற்பட, இருவரும் யாருக்கும் தெரியாமல் அந்த காட்டுப் பகுதிக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
அங்கிருந்து சாகுந்தலாவை பிரிந்து செல்லும் துஷ்யந்த், சிறிது நாட்கள் கழித்து அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்து, கையில் ஒரு மோதிரத்தையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
காலங்கள் உருண்டோட, சாகுந்தலா கருவுறுகிறாள். துஷ்யந்திற்காக அவரை நினைத்து ஏங்கி நிற்கும் சாகுந்தலாவை, தன் பேச்சினை கேட்கவில்லை என்று துர்வாச மகரிஷி சாபம் ஒன்றை விட்டுச் செல்கிறார்.
அந்த சாபம் சாகுந்தலாவை எந்த அளவிற்கு வாட்டி வதைத்தது.? தனது கணவர் துஷ்யந்தோடு மீண்டும் சாகுந்தலா இணைந்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
பொருத்தமான காதல் ஜோடிகளாக இருக்கின்றனர் தேவ் மோகனும் சமந்தாவும். சமந்தா இன்னும் சற்று சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றியது.
மேலும், பல இடங்களில் காட்சிகளுக்கு ஒட்டாத நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு ஆகப்பெரும் பலவீனம் வி எஃப் எக்ஸ் தான். முழுப் படத்தையும் ஸ்டூடியோவில் மட்டுமே வைத்து படமாக்கியிருப்பார்கள் போலும்.
பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவு கலர்ஃபுல். மற்றபடி, படத்தின் நீளத்தைக் குறைத்து இன்னும் சற்று சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் ஏற்றியிருந்திருக்கலாம்.
துஷ்யந்தும் சாகுந்தலாவும் அரண்மனையில் சந்திக்கும் காட்சிகள் ரசிக்க வைத்தது.
வி எஃப் எக்ஸ் இல் அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திக்கலாம்.
சுட்டி டிவியில் பார்க்கும்படியான படமாகத் தான் சாகுந்தலம் வந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.