
கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.
மூவரும் இரவு நேர திருடர்கள். இவர்களையும் சேர்த்து பல திருட்டுக் கும்பலை கைக்குள் வைத்து ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார் பசுபதி ராஜ்.
கொள்ளையடிக்கும் நகைகள், பணம் அனைத்தும் பசுபதி ராஜாவுக்கு சென்றுவிடும்.
இதில் சின்னா, ராஜ் பிரியன், காசிமாயன் மூவரும் திறமையான திருடர்கள். பெண், போதை என இரண்டிற்கும் ஆசைப்படாதவர்கள். அவ்வப்போது இல்லாதவர்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்கள்.
சொந்த ஊரிலேயே ஊர் பணக்காரரான கயல் பெரேரா மீது கை வைத்து விடுகிறார் சின்னா.. மூவரையும் கொலை செய்ய துடிக்கின்றனர் பெராராவின் இரண்டு மகன்களும். அதில் மூத்தவர் தான் ராஜசிம்மன்.
நாயகன் சின்னாவை சுற்றி சுற்றி வரும் நாயகியாக வருகிறார் ரிஷா. ஒரு கட்டத்தில் நாயகனும் காதலுக்கு ஓகே சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
தனது தந்தையை அவமானப்படுத்திய மூவரையும் பழி வாங்க துடிக்கும் ராஜ சிம்மனை தாண்டி சின்னாவின் காதல் ஜெயித்ததா..?? மூவரின் நட்பு கடைசியில் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சின்னா, நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அம்மாசி கதாபாத்திரத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் எப்போதும் வாயில் பீடியை வைத்துக் கொண்டெ இருப்பது எரிச்சலடைய வைத்து விடுகிறது. இன்னும் சற்று தன்னை செதுக்கினால் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் அடிப்பார்.
டிக் டாக் மூலமாக மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகியவர் ராஜ் பிரியன். இது இவருக்கு முதல் படம் என்றாலும், எந்த வித பதட்டமும் இல்லாமல், அனுபவ நடிகரின் நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான, எளிய நடிப்பை கொடுத்திருக்கிறார். நண்பனை துரத்தி விடுகிறோமே என்று ஏங்கும் காட்சிகளிலும் சரக்கு அடித்துவிட்டு நண்பனுக்காக நம்ம உயிர் போனாலும் பரவாயில்ல என்று சொல்லும் இடமாக இருக்கட்டும் இரண்டிலும் நெஞ்சை தொடுகிறார். அடுத்தடுத்த படங்கள் இவர் வீட்டு வாசலை தட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
காசிமாயனின், ஒரு சில காட்சிகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. இவருக்கான காதல் காட்சிகள், பாடல் என இரண்டுமே படத்தோடு ஒட்டாமல் விலகியேச் சென்றது. காட்சிகளை நீக்கியிருந்தால் இன்னும் படத்தின் வேகம் அதிகரித்திருக்கக் கூடும்.
கயல் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். நாயகி ரிஷா கள்ளிக்காட்டுச் செடியில் பூத்த பூவாக அழகில் ஜொலிக்கிறார். நடிப்பிலும் சற்று ஜொலித்திருக்கலாம்.
வாசுவின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்டியுள்ளது. காட்டிய இடத்தையே மீண்டும் மீண்டும் காண்பித்து போர் அடிக்க வைத்துள்ளார்.
ராஜா சாயின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னனி இசையும் அதே தான். வீராங்கன் இயக்கத்தில் படத்தின் இயக்கம் ஒகே தான். காட்சிகளை கொண்டு சென்ற விதத்திற்கு இயக்குனரை பாராட்டிதான் ஆகவேண்டும்.
கதையில் கவனம் இல்லாதது படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் தான். சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அரவாண், என தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில படங்களின் கலவையே ‘கணேசாபுரமாக வந்து நிற்கிறது.
சண்டைக்காட்சியை மிகவும் மிரட்டலாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது.
கணேசாபுரம் – எனர்ஜி இல்லை..





