
இயக்கம்: எஸ் சாம்
கதை: ராம்ஸ் முருகன்
திரைக்கதை: சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
இசை: சகீஷனா சேவியர்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு: ஏ எல் ரமேஷ்
தயாரிப்பு: மகேஷ் செல்வராஜ் (MR Motion Pictures)
நடிகர்கள்: தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், ப்ரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைகுமார், நித்தி,
கதைப்படி,
யோலோ என்ற யூ டியூப் சேனல் வைத்துக் கொண்டு, மக்களிடம் ப்ராங்க் வீடியோ எடுத்து தனது பிசினஸை நடத்தி வருபவர் நாயகன் தேவ்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் தேவிகா. தேவிகாவின் தந்தையான படவா கோபி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.
பெண் பார்ப்பதற்காக வருகிறது விஜே நிக்கியின் குடும்பம். தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே. பிறகு எதற்கு திருமணம் என்கிறார்.
இதனைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைகிறது தேவிகாவின் குடும்பம். தான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அடித்து கூறுகிறார் தேவிகா.
திருமணம் நடந்து விட்டது என்றும், இவரது கணவன் தேவோடு ஹனிமூன் வந்திருந்த போது தான் இவர்களை சந்தித்ததாகவும் கூறுகிறார் நிக்கியின் சகோதரி.
தனக்கு அப்படியாக எதுவும் ஞாபகமில்லை என்று கூறுகிறார் தேவிகா. யார் அந்த தேவ் என்று தேடி அலைகிறார் தேவிகா.
இறுதியாக தேவ் அவரை கண்டுபிடிக்கிறார் தேவிகா., தேவிற்கும் அப்படியான திருமணம் எதுவும் நடக்கவில்லை என்று கூற, சாட்சிகள் அதிகம் இருப்பதாகவும் மேலும், இவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அறிகிறார்கள்.
தங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைகின்றனர் தேவும் தேவிகாவும்.

இறுதியில், அது எப்படி என்று இருவரும் கண்டுபிடித்தார்களா இல்லையா.? இவர்களுக்கு இடையே காதல் என்ற ஒன்று வந்ததா.? அது கைகூடியதா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இருவரும் கதைக்கேற்ற ஜோடிகளாக படம் முழுக்கவே ஜொலித்திருந்தார்கள். படத்தில் மிகப்பெரும் வேகத்தடையே விஜே நிக்கியின் கதாபாத்திரம் தான்.
படத்தில் நிக்கியின் கதாபாத்திரமே படத்திற்கு ஆகப்பெரும் தலைவலி. கதைக்கும் ஒட்டவில்லை, கதாபாத்திரமாகவும் ஒட்டவில்லை. இவரது காட்சிகளை ஒட்டுமொத்தமாகவே படத்திலிருந்து வெட்டியெறிந்திருந்தால் கூட, படத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டிருக்காது தான்.
டார்லிங் படத்தில் வந்த ஒரு கதையை தான் மீண்டும் இப்படத்தில் படமாக்கியிருக்கிறார்கள். தேவ் மற்றும் தேவிகா இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்பதை யாரும் பெரிதாக பொருட்படுத்தாமல், அதனை கடந்து செல்வதும்…
தேவ் கண்முன்னே மற்றொருவரால் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேவ் எப்படி பொறுப்பாக முடியும். அந்த கொலையை செய்தது நான் இல்லை, வேறொருவர் தான் என்று ஒரு இடத்தில் கூட தேவ் கூறாதது ஏன்.?
என படத்தில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது. கதாபாத்திரத்தை எந்த வித சீரியஸ்னஸும் இல்லாமல் எடுத்துச் சென்றது படத்திற்கு சற்று சறுக்கல் தான்.

படத்தில் காமெடிக்கென்று அவ்வளவு இடங்கள் இருந்தும் எந்த இடத்தையும் சரியாக பயன்படுத்தாமல் சென்றிருக்கின்றனர். பலவீனமான வில்லன், அதுவரை கோமாவில் இருந்த வில்லி திடீரென எழுந்து ஓடுவது என படத்தில் … சரி விடுங்கள்
இசை மற்றும் ஒளிப்பதிவு அவர்கள் வேலையை சரியாக செய்திருக்கின்றனர். இருந்தாலும், பாடல்களின் எண்ணிக்கையை சற்று குறைத்திருக்கலாம்.
யோலோ – லாஜிக் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்க வொர்த் தான்..





