
அறிமுக இயக்குனர் ரியாஸ் மராத் அவர்களின் இயக்கத்தில் பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த அனோமி.
தயாரிப்பாளர் : குமார் மங்கட் பதக் , அபிஷேக் பதக் , பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ் , பாவனா & ஆதித் பிரசனாகுமார்
இணை தயாரிப்பாளர்: ராம் மிற்சண்டனி, ராஜேஷ் மேனன்
கிரியேடிவ் தயாரிப்பாளர் : அபினவ் மெஹரோட்ரா
ஒளிப்பதிவாளர்: சுஜித்சாரங்
இசை : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
படத்தொகுப்பு: கிரியன் தாஸ்
சைக்கலாஜி திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம், மலையாள மொழியில் எடுக்கப்பட்டு கடந்த மாதம் ரிலீஸான நிலையில், தமிழில் டப் செய்யப்பட்டு நாளை திரைக்கு இப்படம் வர இருக்கிறது.
ஒரு விபத்தில் தனது தாய் தந்தையரை இழந்த பாவனா, தனது தம்பி ஷெபின் பென்சன் மட்டுமே உலகம் என்றெண்ணி அவரோடு வாழ்ந்து வருகிறார். விபத்து நடந்த இடத்தில் ஷெபின் பென்சன் இருந்ததால் மனரீதியாக அவர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.
இதனால் அவரை எங்கேயும் அனுப்பாமல், வீட்டிற்குள்ளேயே வைத்து பாதுகாத்து வளர்த்து வருகிறார் பாவனா. பாவனா தடயியல் நிபுணராக வேலை பார்த்து வருகிறார். ஒரு தற்கொலை வழக்கை விசாரிக்க அந்த இடத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தம்பி ஷெபின் பென்சன் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியில் உறைகிறார் பாவனா.

பல இடங்களில் தேடி அலைகிறார். மறுநாள் ஷெபின் பென்சன் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். இது தற்கொலை என்று இந்த வழக்கை முடித்து வைக்கிறார் இன்ஸ்பெக்டர் ரகுமான். ஆனால் இது தற்கொலை அல்ல தனது தம்பி தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்று பிடிவாதமாக இருக்கும் பாவனா அது கொலை என்று முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கிறார்.
மேலும், தனது தம்பியோட மட்டும் நிற்காமல் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு தற்கொலையையும் கொலைதான் என்று நீதிபதி முன்பு எடுத்து வைக்கிறார் பாவனா. ரஹ்மானை கடிந்து கொண்ட நீதிபதி விரைவில் அந்த சைக்கோ கில்லரை தேடி கண்டுபிடிக்குமாறு கூறி விடுகிறார்.
தனது வழக்கின் கோணத்தை மாற்றி சைக்கோ கில்லரை தேடி அலைகிறார் ரகுமான். தனது தம்பியை கொலை செய்தவரை சும்மா விடமாட்டேன் என்று கூறி பாவனாவும் ஒரு கோணத்தில் விசாரணையை தொடங்குகிறார். இறுதியில் யார் அந்த சைக்கோ கில்லர்.? எதற்காக இந்த கொலைகளை செய்தார் என்பதை போலீசாரும் பாவனாவும் கண்டுபிடித்தார்கள் இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பாவனாவை கண்டதில் மகிழ்ச்சி தான். படம் எடுத்தவுடனே கதைக்குள் நகர்ந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். ஆரம்பத்திலிருந்தே பரபரவென சென்று கதையின் வேகமானது நமக்குள் தொற்றிக் கொண்டது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே அடுத்தடுத்த காட்சியை சுறுசுறுப்பாக நகர்த்திச் சென்றிருந்தார் இயக்குனர்.
படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருந்தனர்.
முதல் பாதியில் ஆங்காங்கே வந்து சென்று, இரண்டாம் பாதியை தனதாக்கிக் கொண்டு களம் இறங்கி அடித்திருக்கிறார் ரகுமான். விசாரணை நடத்தும் முறையில் தன்னால் என்ன மாதிரியான வேரியேஷன்ஸ் காட்ட முடியுமோ அதைக் காட்டியிருக்கிறார் ரகுமான்.
ஒரு சில இடங்களில் மாஸ் எலிமெண்ட்ஸ் வைத்து திரைக்கதையை பரபரப்பாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். படம் பார்க்கும் யாரும் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத வண்ணம், படத்தினை நகர்த்தியிருந்தது படத்திற்கு ஒரு பலமாகவே பார்க்க முடிந்தது.
ஹாலிவுட் தரத்திற்கான ஒரு ஒளிப்பதிவையும் இசையையும் கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.
பின்னணி இசையில் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர். இறந்ததற்கு பின்னால் மனிதர்கள் செல்லும் உலகை காட்சிப்படுத்திய விதத்திற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். இப்படியான காட்சியெல்லாம் நமது சினிமாவில் கொண்டு வர முடியுமா என்று வியக்க வைக்கும் அளவிற்கான ஒரு படைப்பாக அந்த காட்சியமைப்பு இருந்தது பெரிய பலம்.
ஹாலிவுட் தரத்திற்கான ஒரு படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்..
த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த அனோமி நல்லதொரு தீணியாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..





