
மர்மதேசம் படத்தின் இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் “ஐந்தாம் வேதம்”. ஜீ5-ல் வரும் வெள்ளி முதல் இத்தொடர் ஸ்டிரீமாக இருக்கிறது.
இத்தொடரில், சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீநிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்தொடருக்கு ரேவா இசையமைத்திருக்கிறார்.
அபிராமி மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்திருக்கிறது.
கதைக்குள் பயணிக்கலாம்….
காசியில் பூஜைக்காக சென்ற தன்ஷிகாவிடம், சாமியார் ஒருவர் மரப்பெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, அதனை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார்புரம் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்ல சொல்கிறார்.
அந்த மரப்பெட்டியை உன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது விதி என்று கூறி அதை தன்ஷிகாவின் கையில் கொடுத்ததும் அவர் இறந்து விடுகிறார்.
வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அம்மரப்பட்டியை தூக்கிக் கொண்டு தமிழகத்திற்கு வருகிறார்., அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிடுகிறார். ஆனால், அதற்கு பின்னால் நடக்கும் திடீர் சம்பவங்கள் தன்ஷிகாவை அய்யங்கார்புரத்திற்கு வர வைத்து விடுகிறது.
அங்கிருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் அம்மரப்பட்டியை கொடுக்கிறார் தன்ஷிகா. அம்மரப்பட்டியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார்.
அம்மரப்பெட்டியை அந்த கோவிலில் விட்டுவிட்டு அந்த ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார் தன்ஷிகா. ஆனால், அக்கிராமத்தை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல், அம்மரப்பெட்டியை அடைய பலரும் முயற்சிக்கின்றனர். அம்மரப்பெட்டியின் மர்மம் தான் என்ன.?? ஐந்தாம் வேதம் என்ன.?? ஐந்தாம் வேதத்தை கண்டிபிடிக்க தடையாக இருப்பவர்கள் யார் யார்.??? என்ற கேள்விகளுக்கான விடை தான் மீதித் தொடருக்கான கதை.
பல வருடங்களுக்கு முன் பலரையும் உறைய வைத்த மர்மதேசம் என்ற தொடரினை இயக்கிய நாகாவின் இயக்கத்தில் தான் இந்த தொடர் உருவாகியிருக்கிறது.
புராணக் கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் நாகா. நான்கு வேதங்களை நாம் அனைவரும் அறிவோம். அதென்ன ஐந்தாம் வேதம்.? அந்த வேதம் எதை பறைசாற்றுகிறது.? என்ற கேள்விக்கான விடையை மிக தெளிவாக இத்தொடரின் மூலம் விளக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா.
புராணத்தை ஏஐ தொழில்நுட்பமானது தவறான பாதைக்கு எடுத்துச் செல்லும் என்ற விஷயத்தையும் இத்தொடரில் விளக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியையும் வேகமாக நகர்த்திச் சென்று, நம்மை சீட்டின் நுனிக்கே அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஏ ஐ தொழில்நுட்பமானது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்து.? அது என்ன செய்கிறது என்ற விஷயத்தை இன்னும் சற்று விளக்கமாகவே கூறியிருந்திருக்கலாம் அல்லது புராணக்கதையான ஐந்தாம் வேதத்தை தேடுவதையே மையப்படுத்தி கதையை மிக அழகாக நகர்த்திச் சென்றிருக்கலாம்.
இதற்கு முன் நடித்த படங்களைக் காட்டிலும் இப்படத்தின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான் சாய் தன்ஷிகாவிற்கு. மார்டனாக வந்து தனது கேரக்டரில் வாழ்ந்து சென்றிருக்கிறார் தன்ஷிகா.
அதன்பின், படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டர்களை இயல்பாக நடித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாக நடித்த நால்வரும் கண்களாலே தனது மிரட்டலை வெளிப்படுத்தியிருந்தனர்.
சாமியாராக தோன்றிய நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பும் பாராடும்படியாக இருந்தது.
பின்னணி இசைமற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே ஐந்தாம் வேதத்திற்கு தூணாக நிற்கிறது. தனித்துவமான பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.
ஐந்தாம் வேதம் குறித்த தேடுதல் சுவாரஸ்யமான வேட்டையாக இருந்தது..
மொத்தத்தில்,
ஐந்தாம் வேதம் – வேகம்.