![](https://tamilveedhi.com/wp-content/uploads/2023/06/azhagiya-kanne-movie-review.jpg)
ஆர் விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அழகிய கண்ணே”. இயக்குனர் ஆர் விஜயகுமார் இயக்குனர் சீனு ராமசாமியின் உடன் பிறந்தவர் ஆவார். நாயகன் லியோ சிவக்குமார், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் ஆவார்.
கதைப்படி,
பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் திண்டுக்கல் அருகேயுள்ள தனது கிராமத்தில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார் நாயகன் லியோ சிவக்குமார். ஊரிலேயே தனது வீட்டின் எதிர்வீட்டில் இருக்கும் ஐயர் ஆத்து பொண்ணாக வரும் சஞ்சிதாவுடன் காதல் இருக்கிறது லியோவிற்கு..
இந்நிலையில், சென்னையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேர்கிறார் லியோ. சினிமாவை கற்றுக் கொள்கிறார். படம் இயக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில், சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் நாயகி சஞ்சிதா. தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதலன் லியோவை திருமணம் செய்து கொள்கிறார் சஞ்சிதா. சஞ்சிதாவின் ஊதியத்தில் புது வீடு ஒன்றையும் வாங்கி விடுகிறார்கள்.
அதன்பிறகு, குழந்த்தை பிறக்க, குழந்தையை கவனித்துக் கொள்ளாமல் இருவரும் தவிக்கின்றனர்.
அதன்பிறகு லியோ இயக்குனர் ஆனாரா இல்லையா.? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..
நாயகன் லியோ சிவக்குமார், அறிமுக படம் என்பது போல் இல்லாமல் ஒரு நல்ல கைதேர்ந்த நடிகராக வந்து, காட்சிகளுக்கு உயிர் சேர்த்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சியில், கிராமத்தில் மக்கள் விழிப்புணர்வு மன்றம் என்ற இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யக்கூடிய பாடல் காட்சியில் மிக நன்றாகவே ஆடியிருந்தார். நிச்சயமாக அதற்காக பாராட்டலாம்.
தொடர்ந்து சஞ்சிதாவுடனான காதல் காட்சியிலும் கவர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி தான்.
நாயகி சஞ்சிதா அழகாக வந்து சென்றாலும், ஆங்காங்கே சற்று கதைகளத்தோடு ஒன்றிப் போகாதது போன்ற உணர்வை கொடுத்திருந்தார்.
படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவை உயிரோடு எரிப்பது போன்ற காட்சி இருக்கிறது. அதே காட்சி படத்தின் இடைவேளையிலும் வருகிறது. இடைவேளையில் அந்த காட்சியை எதற்காக வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. படத்தின் வில்லனாக வரும், சஞ்சிதாவின் மாமன், ஆரம்பத்தில் ஹீரோவுடன் செல்லும் போது ஒன்றும் கூறாமல், சென்னைக்கு வந்து வேலை பார்த்து, அவர்களுக்கு திருமணம் முடிந்து, அவர்களுக்கு குழந்தை பிறந்து அதன் பிறகு வந்து பழி வாங்குவதெல்லாம் என்ன பழிவாங்குதல் என்று தெரியவில்லை… அதுவரை அந்த மாமா கேரக்டர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை ((வெறி ஏற்றி கொண்டிருந்திருப்பார் போல))..
அதுமட்டுமல்லாமல், சஞ்சிதாவின் மாமாவையே நாங்கள் வில்லனாக ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவருக்கு ஒத்து ஊத நாலு ரெளடிகள் வேறு…
சென்னையில் இருக்கும் பெரிய தயாரிப்பாளருக்கு திண்டுக்கல்லில் குக்கிராமத்தில் இருக்கும் நபர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை…
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த சம்பவத்தை யார் செய்தார் என்பதை கூறாமலேயே படத்தை முடித்ததெல்லாம்… ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்பா… முடியல..
உதவி இயக்குனர்களின் வலி என்று கூறி எடுக்கப்பட்ட படமானது, படம் பார்ப்பவர்களுக்கு வலியை கொடுத்துவிட்டது…
படத்தின் ஆரம்ப பாடலான விழிப்புணர்வு பாடல் கேட்கும் ரகம்… விஜய் சேதுபதி ஒரு காட்சியில் முகத்தைக் காட்டிச் சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் அழகிய கண்ணே – ஜொலிக்கவில்லை…