
இயக்குனர் கே என் ஆர் ராஜா நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் இந்த மாவீரன் பிள்ளை. ராதாரவி, வீரப்பனின் மகள் விஜயலட்சுமி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கிறது இப்படம்.
கதைப்படி,
கூத்துக் கலைஞரான ராதரவிக்கு இரு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் வழக்கறிஞர் படித்து விட்டு, அரசின் மதுவிற்கு அடிமையாகி, இறந்து விடுகிறார்.
மறுபுறம், ஒரு பெண்ணை காதலித்து சுற்றித்திரிகிறார் இரண்டாவது மகனான ராஜா.
மூத்த மகனின் மறைவிற்குப் பிறகு, தனது வீட்டில் வளர்த்த மாடு ஒன்று தண்ணீர் பஞ்சத்தால் இறந்து விடுகிறது. மழையும் பொழியாததால் விவசாயமும் அழிந்து விட, விரக்தியில் தற்கொலை செய்து விடுகிறார் ராதாரவி.
அண்ணன், அப்பா இறந்த துக்கத்தில் ராஜா ஒரு அதிரடியான முடிவு ஒன்றை கையில் எடுக்கிறார். அவர் எடுத்த அந்த முடிவால் சமூகம் எந்த அளவிற்கு மாறியது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக ராஜா, கதைக்கு தேவையானதை கொடுத்திருந்தாலும், ஒரு சில இடங்களில் சற்று ஆக்டிங்கை நன்றாகவே கொடுத்திருதிருக்கலாம்.
வழக்கு எண் 18/9ல் நாயகனின் நண்பனாக நடித்திருந்த சிறுவன், இந்த படத்திலும் நடித்து தனது கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.
கதையின் முக்கிய தூணாக வந்து நிற்கும் ராதாரவி தனது அனுபவ நடிப்பை அழகாகவே கொடுத்திருக்கிறார். மகன் இறந்த கையோடு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் செல்வதும், ஆறு நிறைய தண்ணீர் ஓடியும் வறட்சி என்று காட்டுவதும் என ஒரு சில இடங்களில் திரைக்கதையை திணிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்து கதையின் ஓட்டத்திற்கான திரைக்கதையை கொடுத்திருந்திருக்கலாம்.
வீரப்பனின் மகளான விஜயலட்சுமி அறிமுக காட்சியைத் தவிர, மற்ற எந்த காட்சியிலும் கதையில் ஒட்டாமல் தனித்து நின்று சென்றிருக்கிறார். சாராயத்திற்கு எதிரான போராட்டம் என்று க்ளைமாக்ஸில் வந்து நிற்கிறார்.
கையில் எடுத்த கதை மிகவும் அழுத்தமானது என்றாலும், அதை திரைக்கதையாக கொடுக்கும் போது இயக்குனர் இன்னும் சற்று அதிகமான மெனக்கெடலை கொடுத்திருந்திருக்கலாம் என்று தோன்றியது.
ரவிவர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆலயமணியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துகளை பறைசாற்றியுள்ளது.
ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத்தின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.
மொத்தத்தில்,
மாவீரன் பிள்ளை – இன்னும் சற்று ஓங்கி ஒலித்திருந்திருக்கலாம்.



