கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ளது “தேவ்”. இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். காதலுக்கு மேல் இந்த உலகத்தில் ஒன்று உள்ளது என்று இப்படத்தின் ப்ரஸ் மீட்டில் கார்த்தி கூறியிருந்தார். அது என்னவென்று இப்படத்தின் விமர்சனத்தில் காணலாம்.
பணக்கார வீட்டில் பிறந்து வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார் கார்த்தி. இவரின் நண்பனாக வருகிறார் விக்னேஷ். முகநூலில் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல், விடா முயற்சி அவரையும் காதலில் விழ வைக்கிறார்.
காதல் பின் மோதல் என வாழ்க்கை செல்ல, ஒரு கட்டத்தில் பெரிய மோதலாகவும் வெடிக்கிறது. பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகனும் நாயகியும் சந்தோஷமாக இருக்கும் போதும், கண்ணீர் வடிக்கும் போதும் அவர்களோடு நாம் கலந்துகொள்ளவே முடியவில்லை. அதற்கான காரணம் திரைக்கதையில் மிஸ் ஆன எமோஷ்னலும், ஆடியன்ஸோடு ஒட்டாத அந்நியத்தன்மையிலான காட்சியமைப்புகளும் தான். அம்மா இல்லாத மகனின் உணர்வுகளும், அப்பா கைவிட்டுப் போன மகளின் உணர்வுகளும் வலிமையானவை. அதை வைத்து ஒரு அற்புதமான காதல் சித்திரத்தைத் தீட்டி முத்திரைப் பதித்து இருக்கலாம். போச்சு!
கார்த்திகை மாதப் பனித்துளிகளில் முங்கி வந்தவர் போல அத்தனைப் பிரஷாக இருக்கிறார் கார்த்தி. ஒவ்வொரு ப்ரேமிலும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்ஸுக்கு நிச்சயம் பெண்களிடம் இருந்து ஆர்டின் எமோஜி தான்.
அதேபோல் முரட்டு சிங்கிள் என்று வறட்டுக் கெளரவம் பேசும் விடலைகளை கூட விரல் கடிக்க வைக்கும் அழகோடு ரகுல் ப்ரீத்திசிங். பார்வையும் நடிப்பும் ஆசம். கேரக்டர் ரோல் மற்றும் காமெடி ரோலில் விக்னேஷ். அவர் நடிப்பு நம்மை கொடுமை பண்ணாமல் இருந்ததே நமக்கான கொடுப்பணை! ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் இருவரையும் இப்படியா வீணடித்திருக்க வேண்டும்?
தேவ் படத்தை தூக்கி நிறுத்தும் ஒரே தேவன் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மட்டுமே. அவர் வைக்கும் ஒவ்வொரு ப்ரேமும் வெவ்வேறு லெவல். க்ளாசிக் வேல்ராஜ். கங்க்ராட்ஸ்! பின்னணி இசையில் ஓரளவு தப்பிக்கும் ஹாரிஸ் பாடல்களில் தப்புத்தாளம் போடுகிறார்.
கவிதை போல வார்த்து இருக்க வேண்டிய படம். கைவிரல் அளவேணும் வலுவில்லாத திரைக்கதையால் பொழிவிழந்து நிற்கிறது.
தேவ் – காதல் உணர்வு