
நடிகர்கள்: ஆர்.ஜே.பி, கேத்தி, செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி,ஜிவி,
தயாரிப்பு: RJP Media
தயாரிப்பாளர்: கலாரவி
எழுத்து மற்றும் இயக்கம் : RJP
இசை: சங்கர் ராம்
ஒளிப்பதிவு : செல்வகுமார்
எடிட்டர்: வளர்பாண்டி
கதைப்படி,
கதையின் நாயகனான ஆர் ஜே பி நாயகியான கேத்தி இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகி கேத்தி மேல் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், நாயகன் ஆர் ஜேபி கீழ் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் வருகின்றனர்.
முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று காதலில் சென்றடைகிறது.
இருவரும் காதலிக்கின்றனர். மாற்று சமூகம் என்றாலே வெறுப்பைக் கக்கும் குணம் கொண்டவர் கேத்தியின் தந்தைஅனந்த் ராம். தனது மகள் ஒரு கீழ் சமூகத்தைச் சேர்ந்தவரை காதலிக்கும் விபரம் தெரிந்ததும் கடும் கோபம் கொண்டு, தனது உறவுக்கார பையனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.
அதன்பிறகு ஆர்ஜேபி-கேத்தி இவர்களின் காதல் என்னவானது.?? க்ளைமாக்ஸ் பாசிடிவா அல்லது நெகடிவா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக ஆர்ஜேபி, நல்லதொரு பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். இல்லை இல்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தானே இயக்குனர் என்பதால், கதை எழுதும் போது, அக்கதாபாத்திரத்தை தனது மனதுக்குள் ஆழமாக இறக்கிக் கொண்டு, அதன் உருவத்தை திரையில் நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார்.
அதிலும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைக்கும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்து நன்றாகவே கவர்ந்திருக்கிறார்.
காட்சிக்கு காட்சி அழகு தேவதையாக வந்து காட்சியளித்திருக்கிறார் கேத்தி. பால் வடியும் முகமாக படம் முழுவதும் வந்தும், நடிப்பில் நல்லதொரு முயற்சியைக் கொடுத்திருக்கிறார்.
க்ளைமாக்ஸில் இவரின் நடிப்பும் பெரிதாக பாராட்டும்படியாக இருந்தது. மேலும், படத்தில் நடித்த ஆர்ஜேபியின் தாத்தாவாக நடித்த பவுன் ராஜ், நாயகியின் அப்பாவாக நடித்த அனந்த் ராம், நாயகியின் அம்மாவாக நடித்த கலாவதி, நண்பர்களாக வந்த சபி, ஜிவி, வில்லனாக நடித்த செந்தில் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருந்தனர்.

க்ளைமாக்ஸில் தாத்தா பாடும் பாட்டு, மனதை உருக வைத்துவிட்டது.
சங்கர் ராம் அவர்களின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தது. பின்னணி இசையும் கதைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார்.
செல்வகுமார் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற காட்டியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆணவக் கொலை பற்றிய மற்றொரு படமாக இந்த திவ்யா வந்திருக்கிறது. மற்ற படங்களில் இருந்து தனது இயக்கத்தின் திறமை மூலம், தனிப்பட்டு திவ்யாவை தெரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஊரை விட்டு, தனது காதலியை இழுத்துக் கொண்டு ஓடும் போது, வில்லன்களை பிடிக்கும் வரை பஸ்ஸுக்குள்ளே இருப்போம் என்று சொல்வது போன்ற காட்சியமைப்புகள், போலீஸ் ஸ்டேஷனில் பேசி முடித்தப் பிறகு மீண்டும் பெற்றோருடன் அனுப்பி வைத்தால் என்ன நடக்கும் என்பது முன்கூட்டியே படம் பார்ப்பவர்களால் யூகிக்க வைத்த காட்சி என ஒரு சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், படம் எடுக்கப்பட்ட நோக்கத்திற்காக இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜேபி-யை வெகுவாக பாராட்டலாம்.
திவ்யா – மாறாத சமூகம்…





