
பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தாரணிகா ஸ்ருதி, சுஜித் சங்கர், முனீஸ் காந்த், கல்கி ராஜா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியம், பிரபாகர், ராமச்சந்திரன், இந்துமதி இவர்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் ”கொம்பு சீவி”.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாலசுப்ரமணியம். மேலும், படத்தொகுப்பு செய்திருக்கிறார் தினேஷ் பொன்ராஜ்.
தயாரித்திருக்கிறார் முகேஷ் டி செல்லையா..
ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து சண்டியராக வலம் வந்து கொண்டிருப்பவர் சரத்குமார். சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை இழந்த சண்முக பாண்டியனை அரவணைத்து தன்னுடனே வளர்த்து வருகிறார் சரத்குமார்.
சரத்குமார் சண்முக பாண்டியனை மருமகன் என்று அழைப்பதும் சண்முக பாண்டியன் சரத்குமாரை மாமா என்று அழைப்பதும் இவ்வாறு இவர்களது உறவு வளர்ந்து கொண்டிருக்கிறது. மாமாவுக்கு ஒன்று என்றால் களத்தில் முன்வந்து சண்டை செய்கிறார் சண்முக பாண்டியன்…
மலைப்பகுதியில் நீர் இல்லாத போது விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களான இவர்கள் அநேக நேரம் அணைப்பகுதியில் நீர் இருப்பதால் இவர்களால் விவசாயம் செய்ய இயலாமல் போகிறது. இதனால் கஞ்சா செடிகளை விற்று தனது வாழ்வாதாரத்தை பார்த்து வருகின்றனர். சரத்குமாரும் சண்முக பாண்டியன் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களின் இந்த கஞ்சா தொழிலை முற்றிலுமாக அளிக்க களத்தில் இறங்குகிறார் போலீஸ் உயர் அதிகாரி சுஜித் சங்கர். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதை படத்தின் மீதி கதை…

ஆறடி உயரத்தில் மலையாக வந்து தனது நடிப்பை அசுரத்தனமாக கொடுத்திருக்கிறார் நாயகன் சண்முக பாண்டியன். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது தந்தை விஜயகாந்த் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார்.
ஆக்சன் காட்சிகளில் அப்படியான ஒரு மெனக்கடலை கொடுத்து மிரட்டலாக தனது நடிப்பை கொடுத்து விட்டார் சண்முக பாண்டியன். இவரைத் தொடர்ந்து சரத்குமார் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதுமே காமெடி கலந்த ஒரு கதாபாத்திரமாக வந்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் சரத்குமார். இப்படியான சரத்குமாரை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார்.
கதாநாயகியாக தாரணிகா சுருதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நடிப்பில் என்னும் சற்றும் மெனக்கடல் தேவை என்று தோன்ற வைத்துவிட்டார்.
வில்லனாக சுஜித் சங்கர் வழக்கமான தனது உடல் மொழியை பயன்படுத்தி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் மட்டுமே படத்தில் பெரிதாக கை கொடுத்திருக்கிறது தவிர, படத்தில் எந்த ஒரு காட்சியையும் ரசிக்கும் படியாக கொடுக்க இயக்குனர் தவறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
ஒரு சில காமெடி காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை நன்றாகவே மெனக்கடல் செய்திருக்கலாம் இயக்குனர் பொன் ராம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தது படத்திற்கு பெரும் பலம் தான்..
பின்னணி இசை ஏனோ அடித்து நொறுக்கி இருக்கிறார். இரைச்சல் தான் அதிகம். சத்தத்தை குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவு காட்சிகளில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. படத்தொகுப்பும் ஷார்ப்பாக இருந்தது படத்திற்கு பெரிதாக கை கொடுத்திருக்கிறது.
மேலும் படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களான காளி வெங்கட், ஜார்ஜ் மரியம், முனீஸ் காந்த் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது. கல்கி ராஜாவின் காமெடி ஒரு சில இடங்களில் சற்று கை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில்,
கொம்பு சீவி – கூர்மை இல்லை





