
கூழாங்கல் படத்தினை இயக்கிய பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கொட்டுக்காளி”.
இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் இல்லாத இந்த படத்திற்கு சவுண்ட் டிசைனராக சுரேன் மற்றும் அழகிய கூத்தன் பணிபுரிந்திருக்கின்றனர்.
பித்து பிடித்தவர் போல் இருக்கும் தனது மாமன் மகள் அன்னா பென்னை அழைத்துக் கொண்டு, பூசாரி ஒருவரிடம் செல்லத் தயராகிறார் சூரி.
சூரி, அவரது அக்கா இருவர், சூரியின் அப்பா, சூரியின் மாமா, அத்தை, அக்கா மகன், நண்பர்கள் சிலர் என ஒட்டுமொத்தமாக ஆட்டோ, பைக் என எடுத்துக் கொண்டு தனது ஊரில் இருந்து பூசாரியின் ஊருக்கு பயணமாகின்றனர்.
எதற்காக பித்து பிடித்தது.? அன்னா பென் எதற்காக அமைதியாக இருக்கிறார்.? சூரியின் கோபம் தீர்ந்ததா.?? என இன்னும் பல கேள்விகளுக்கு விடை சுருக்கமாகவே கிடைக்கும்.. அதுதான் இரண்டாம் பாதி.
நாயகன் சூரி, தான் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பதை விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆணித்தனமான நடிப்பைக் கொடுத்து நிரூபித்திருக்கிறார்.
எதற்காக அன்னா பென் இப்படி இருக்கிறார் என்பதை கூறி, அங்கிருந்தவர்களை அடி துவைக்கும் காட்சியில் உச் கொட்ட வைத்து விட்டார் சூரி.
சூரியின் அக்காவாக நடித்த இருவரும் நம்மை உடன் பிறந்தவர்களின் பக்கம் அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.
கதையின் நாயகியான அன்னா பென் தனது கண்களால் ஆயிரம் அர்த்தங்களை வீசிச் செல்கிறார். தனக்கான சுதந்திரம் எது என்பதை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், தனக்கான சந்தோஷம் எது என்பதை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார்.
பின்னணி இசை ஏதுமில்லாது, பின்னணியில் ஒலிக்கும் ஒலியை மட்டும் வைத்துக் கொண்டு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஒரு வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி ஆணாதிக்கத்தில் பெண்ணியம் எப்படியாக இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது இந்த கொட்டுக்காளி.
சக்தியின் ஒளிப்பதிவு நம்மையும் அவர்களோடு பயணிக்க வைத்திருக்கிறது.
ஜனரஞ்சகமான உயிரோட்டமான இப்படியான காவியம் தமிழ் சினிமாவிற்கு வருவது என்பது அரிதான விஷயம் தான்.
கொட்டுக்காளி – கொண்டாடப்பட வேண்டிய படைப்பு…





