![](https://tamilveedhi.com/wp-content/uploads/2023/11/Rule-number-4-movie-review.jpg)
ஷிமி இஸட் தயாரிப்பில் பாஸர் இயக்கத்தில் ஏகே பிரதீப் கிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ‘ரூல் நம்பர் 4.’
கதைப்படி,
நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்ப வரும் வேனின் டிரைவராக பணிபுரிகிறார். அவருக்கு நாயகி ஸ்ரீ கோபிகா மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள்.
பின் ஒருதலை காதலை, இருதலை காதலாக மாற்றி விடுகிறார் பிரதீப் கிருஷ்ணா. அதன் பிறகு தான் பிரதீப்பிற்கு தெரிய வருகிறது, தனது காதலி தன்னோடு வேனில் துப்பாக்கி ஏந்தி வரும் செக்யூரிட்டியின் மகள் என்று.
காதலை கோபிகாவின் தந்தையிடம் கூற நினைக்கிறார் பிரதீப். இதற்காக பணம் ஏற்றிச் செல்லும் வேனில், கோபிகாவையும் ஏற்றிக் கொண்டு, பணத்தோடு செல்லும் வேனில் தனது காதல் விஷயத்தை கோபிகாவின் தந்தையிடம் கூறுகிறார்.
அப்போது, பணம் கொண்டு செல்லும் வேனை கடத்துகிறது ஒரு கும்பல். வேனிற்குள் இருந்த பேங்க் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறது அந்த கும்பல்.
இறுதியில், கடத்தல் கும்பலிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா.? இந்த கடத்தலுக்கு யார் திட்டம் தீட்டியது.? பிரதீப்பின் காதல் கைகூடியதா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
இயக்கம் பாஸர்
நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா இளமையாகவும், நல்லதொரு எனர்ஜியோடும் வந்து காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். காதலுக்காக சின்ன சின்ன விஷயங்கள் செய்வது ரசிக்கும்படியாக இருந்தது.
நாயகியான ஸ்ரீகோபிகா படத்திற்கு மிகப்பெரும் பலம். அழகு தேவதையாக படத்திற்கு காட்சியளித்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷனில் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் கோபிகா.
க்ளைமாக்ஸ் காட்சியில் கோபிகா எடுத்த அவதாரம் மிகவும் ரசிக்கும்படியாகவும் பிரம்மிக்கும்படியாகவும் இருந்தது.
மற்றபடி, மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதையை வித்தியாசமான கதைகளத்தோடு கொண்டு வந்து இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆங்காங்கே சில லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்த்தாலும், படத்தின் வேகமும் சுவாரஸ்யமும் அதை மறக்கடிக்க வைத்திருக்கிறது.
அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் யாரும் எதிர்பாராதது.
பணத்தை கடத்த வரும் கும்பல், மிகவும் எனர்ஜியோடு தங்களது கதாபாத்திரத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.
கேரள காட்டுப் பகுதியின் செழுமையை அதன் அழகு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.
என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’ பாடல் ரசனை.. பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை,
கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.
கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை மணிக்கணக்காக தாக்கிக் கொண்டேயிருப்பது சலிப்பு தருகிறது.
ரூல் நம்பர் 4 – பரபரப்பு…