
நாயகன் ஷர்வானந்த், ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் மூவரும் இணைபிரியா நண்பர்கள். . மூவருக்குமே பல ஆசைகள், தேவைகள் இருக்கின்றன. அதை எதையுமே நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றனர். இச்சூழலில் தான் டைம் மிஷினோடு வரும் நாசரை பார்க்கின்றனர் மூவரும்.
மூவரையும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடந்த காலத்திற்கு அனுப்பி வைக்கிறார் நாசர். தான் சிறு வயதில் இழந்த தன் தாயின் மரணத்தை தடுக்க நினைக்கிறார் ஷர்வானந்த். அது நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஷர்வானந்த், மிகவும் நேர்த்தியான அழகான நடிப்பைக் கொடுத்து நம்மை கவர்ந்திழுக்கிறார். அம்மா மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கண்களை குளமாக்கி விட்டுச் செல்கிறார். கூடவே, ரமேஷ் திலக் மற்றும் சதீஷின் நடிப்பையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். காமெடி மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பையும் இருவரும் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
அம்மா என்ற பாடல் நம் மனதை உருக வைத்து, கதைக்குள் இணைக்கும் பணியை நன்றாகவே செய்திருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. கடந்த காலதையும் நிகழ் காலத்தையும் தனித்தனி ஒளிப்பதிவில் நம்மை கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
சையின்ஸ் பிக்ஷன் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், அம்மா செண்டிமெண்ட் காமெடி என படத்தில் எதிர்பார்க்க கூட முடியாத பல திருப்பங்களை கொடுத்து நம்மை பெரிதும் கவர்ந்திருக்கிறார் இயக்குனர்.
அழகான பாசத்தை அளவில்லாமல் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கணம் – மனதை பதம் பார்த்துவிடும்..





