
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் தான் “அன்பறிவு”.
மேலும், இப்படத்தில் நெப்போலியன், விதார்த், சாய்குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மிரா மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கதைப்படி,
ஊரில் பெரும் செல்வந்தராகவும் பெரும் மதிப்பும் மரியாதையுடனும் இருப்பவர் நெப்போலியன். இவரது மகளான ஆஷா சரத்தை வேற்று சமூகத்தைச் சேர்ந்தவரான சாய்குமார் காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில், இருவரின் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார் நெப்போலியன்.

வீட்டு வேலை பார்த்து வரும் விதார்த், கலகத்தை மூட்டிவிட்டு ஆஷா சரத்தையும் சாய்குமாரையும் பிரித்து விடுகிறார்.
இதனால், தனக்கு பிறந்த இரடைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை ((அறிவு)) சாய்குமார் எடுத்துச் சென்று வளர்க்கிறார்.
ஆஷா சரத் மற்றொரு குழந்தையை (அன்பு), தனது தந்தையான நெப்போலியனோடு கிராமத்தில் தங்கி வளர்க்கிறார்.
கனடாவில் மிகப்பெரும் தொழிலதிபராக வளர்கிறார் சாய்குமர். 25 வருடங்கள் உருண்டோட, தனது அம்மா உயிரோட தான் இருக்கிறார் என தெரிய வருகிறது அறிவிற்கு.
மதுரையில் சண்டை, சச்சரவு, வெட்டு, குத்து என வளர்ந்து வருகிறார் அன்பு.
உண்மை அறிந்த அறிவு, கனடாவில் இருந்து கிராமத்திற்கு வருகிறார். கிராமத்தில் அன்புவின் இடத்தில் அறிவு இருந்து விடுகிறார். அறிவோட இடத்திற்கு அன்பு அனுப்பப்படுகிறார். ஆரம்பமாகிறது படத்தின் அடுத்த கட்ட நகர்வு..
இறுதியில், பிரிந்து கிடக்கும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா.? ஜாதியால் பிரிந்து கிடக்கும் ஊர் ஒன்று சேர்ந்ததா.? வில்லன் பழி தீர்க்கப்பட்டாரா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

அன்பு மற்றும் அறிவு என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஓபனிங்க் சீனில் ஆரம்பிக்கப்பட்ட இவரது பில்டப் காட்சிகள் பட இறுதி வரை இருந்தது பெரும் சோதனையான நிகழ்வு. இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறோம் என்றால் அதற்கான மெனக்கெடல், உழைப்பு என எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும். ஆனால், இப்படத்தில ஆதி, அதை எந்த இடத்திலும் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ஓவர் ஆக்டிங்கை ஓவராக கொடுத்து நம்மை கடுப்படைய வைத்ததில் முழு பெருமை ஆதிக்கே சேரும்.
உங்களால நல்ல நடிக்க முடியும் என்பதை அனைவரும் அறிவார்கள் அப்புறம் எதுக்கு ஆதி இப்படியெல்லாம்.?
நெப்போலியன், வழக்கமான பெரிய மீசை, முகம் முழுவதும் தாடி, தாத்தா கேரக்டர், என ஏழடி ஜாம்பவனாக வந்து தனது கேரக்டரை நிவர்த்தி செய்திருக்கிறார்.
இப்படத்தில் சற்று ஆறுதல் என்றால் அது விதார்த் தான்.. இதுவரை தோன்றாத தோற்றத்திலும் , தோன்றாத கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து அதில் என்ன மாதிரியான உடல்வாகு மொழியில் நடிக்க முடியுமோ அதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் விதார்த்.

சாய்குமார், பல படங்களில் நடித்த அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்காக பெரிதான ஸ்கோப் படத்தில் இல்லாமல் போனது.
ஆஷா சரத், அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.பாசத்தை பங்கு போடாமல், இரு மகன்களையும் ஒருசேர வைத்து அன்பு பாராட்டும் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஆஷா.
ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் தீனாவின் டைமிங் காமெடிகள் இப்படத்தில் மிஸ்சிங். நாயகிகள் காஷ்மிரா மற்றும் ஷிவானி ராஜசேகர் இருவருக்கும் பெரிதான காட்சிகள் இல்லாததால், அவர்களின் நடிப்பையும் பெரிதாக காணமுடியவில்லை. இரண்டு டயலாக் என்றாலும், வந்த காட்சிகளில் சிரிக்க வைத்துவிட்டார் முல்லை.
வலுவான கதை என்றாலும், அதை நகர்த்தி செல்வதில் சற்று சறுக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் ராம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை யார் காரில் வந்து இறங்கினாலும் பில்டப் காட்சிகள் தான்.? அப்படியொரு பில்டப் காட்சிகள் எதற்காக. ? அடுத்து என்ன நடக்கும் என படம் பார்க்கும் ரசிகர்களை சரியாக யூகிக்க வைத்தது படத்திற்கு அடுத்த சறுக்கல்..
எப்போதுமே ஹிப் ஹாப் தமிழா ஆதியின் படத்தில் அவரது நடிப்பை விட இசை பெரிதும் பேசப்படும், ஆனால், இந்த படத்தில் எந்த இடத்திலுமே பேசவிடாமல் ஆக்கிவிட்டார் ஆதி. பாடல் மற்றும் பின்னனி இசை இரண்டும் படத்திற்கு எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு நமக்கு சற்று ஆறுதல்.




