Spotlightசினிமாவிமர்சனங்கள்

80’S பில்டப் விமர்சனம் 3/5

இயக்கம் : கல்யாண்

சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்க்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “80ஸ் பில்டப்”.

இயக்குனர் கல்யாண் இதற்கு முன் ஜேக்பாட், குலேபகாவலி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.

இசை ஜிப்ரானும் ஒளிப்பதிவை ஜேக்கப் ரத்தினராஜும் பார்த்திருக்கின்றனர்.

சரி கதைக்குள் சென்றுவிடலாம்….

80 காலகட்டங்களில் கதை நகர்கிறது. தீவிர கமல்ஹாசன் ரசிகராக வருகிறார் நாயகன் சந்தானம். தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் சுந்தர் ராஜன். அரச குடும்பத்தைச் சேர்ந்தது இவர்களது குடும்பம்.
இந்நிலையில், சந்தானம் வீட்டில் புதையல் ஒன்றிற்கான வரைவு படம் கத்தி ஒன்றில் இருப்பதை அறிந்த மன்சூர் அலிகான், அதை கைப்பற்ற தனது டீமோடு இறங்குகிறார்.

அப்போது, சுந்தர் ராஜன் இறந்துவிடுகிறார். இறப்பதற்கு முன்பு மன்சூர் அலிகானின் வைரங்களை விழுங்கி விடுகிறார். இந்த வைரங்களை எடுப்பதற்காக மன்சூர் அலிகான் டீம் அவர்களது வீட்டிற்குள் இறங்குகிறது.

இறப்பு வீட்டிற்கு வரும் நாயகி ராதிகா ப்ரீத்தியை, பார்த்ததும் காதலில் விழுகிறார் சந்தானம்.

ஒருநாளில் ராதிகா ப்ரீத்தியை காதலில் விழ வைக்கிறேன் என்று சந்தானம் தனது தங்கையிடம் சவால் விடுகிறார்.

கொடுத்த சவாலில் சந்தானம் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

சமீப படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நகர்ந்து வரும் சந்தானம், இப்படத்திலும் அதையே கையாண்டிருக்கிறார். படம் முழுவதையும் கலகலப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் முழு படத்தையும் கொடுத்திருக்கிறார் சந்தானம். இறப்பு வீட்டில் காதல் கதை சுழல, அதை காமெடி கலந்து கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் சந்தானம்.

காட்சிக்கு காட்சி அழகு தேவதையாக வந்து, நம்மை ஈர்த்திருக்கிறார் ராதிகா ப்ரீத்தி. சந்தானம் அடிக்கும் காமெடிக்கெல்லாம், சரியாக கம்பெனி கொடுத்து அதற்கு ஈடு கொடுத்திருக்கிறார் ராதிகா. பாடல் காட்சியில் இன்னும் சற்று அதிகமாகவே நம்மை கவர்ந்திருக்கிறார் . கண்களால் படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் ராதிகா.

ஆனந்தராஜ் மற்றும் ஆடுகளம் நரேன் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் சிரிப்பலையின் உச்சம்… இவர்கள் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தது.

மயில்சாமி, சாமிநாதன் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத்தை அளவோடு அழகாக செய்து முடித்திருக்கிறார்கள்.

கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்க்ஸ்லி வரும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் வேகத்தடை தான். அதை படத்திலிருந்து முழுவதுமாகவே தூக்கியிருக்கலாம்.

காமெடிக்கு மட்டுமே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண். அதை சரியாகவே செய்தும் முடித்திருக்கிறார். ஆனால், ஓரிரு இடங்களில் அதை இன்னும் சற்று கூடுதலாக கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

பல இடங்களில் லாஜிக் எல்லை மீறி போனாலும், சிரிப்பதற்கு எதுக்கு லாஜிக் என்று எடுத்துக் கொண்டு கடந்து சென்றால், சிரிப்பு சரவெடிக்கு பில்டப் கேரண்டி தான்.

ஜிப்ரானின் இசை பெரிதாக கைகொடுக்காதது ஏனோ.? ஒளிப்பதிவில் ஜேக்கப் ரத்தினராஜ் முத்திரை பதித்திருக்கிறார். படம் முழுக்க 80 காலகட்டம் என்பதால், அதற்காகவே ஒளிப்பதிவை மிக கவனமுடன் கையாண்டு அதை தெளிவாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதற்காக அவருக்கு பெரிதாகவே பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

80’S பில்டப் – காமெடிக்கு இந்த கேங்க் கேரண்டி…

Facebook Comments

Related Articles

Back to top button