Spotlightசினிமாவிமர்சனங்கள்

இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சி – ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன்!

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.
நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாய் மின்னுவது உறுதி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மட்டும் இன்றி திரைப்படங்களிலும் அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக தயாரித்து பதிவேற்றம் செய்யலாம். நடனத்தில் தனி ஒருவர் நடனம் ஆடுவது மட்டும் இன்றி, குழுவாக நடனம் ஆடும் வீடியோவும் பதிவேற்றம் செய்யலாம். குழு நடனம் என்றால் ஒரு குழுவில் 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 24 பேர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டி பிரமாண்டமான முறையில், தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிக்கவும், இசை திறமையுள்ளவர்களுக்கு பாடகர், இசைக் கலைஞர், நடனத்தில் திறமையுள்ளவர்களுக்கு நடனம் என பல வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் பட தலைப்பு ஆகியவை ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை குளோப் நெக்சஸ் நிறுவனம் பிரபலப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க பொது பிரிவு வயது வரம்பாக 3 முதல் 45 என நிர்ணயம் செய்துள்ளோம். அதேபோல், டீன் என்ற பிரிவுக்கு 13 முதல் 19 வயதும், சீனியர் என்ற பிரிவுக்கு 20 முதல் 45 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வயது வரம்பாக 3 முதல் 12 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்வதோடு, உங்களது 30 நொடிகள் வீடியோவையும் இதே தளத்தில் பதிவேற்றலாம்.
மேலும், இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தனிப்பட்டவர்களுக்கு ரூ.299 வசூலிக்கப்படுகிறது. குழுவாக நடனம் ஆடுபவர்களுக்கு குழு கட்டணமாக ரூ.1499 வசூலிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஆர்வத்தில் பதிவு செய்துவிட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதை சாதாரணமாக விட்டுவிடாமல், இதில் தீவிரமாக செயல்படுவதற்காகவே இந்த சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திருமதி. மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் செல்வி.பவித்ரா, பொது மேலாளர் செல்வி.தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடகத்தினருக்கும் நன்றி. எங்கள் நிருவனம் கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக செயல்பட்டு வருகிறோம். தற்போது மீடியாவுக்குள் நுழைகிறோம்.

இதை சாதாரணமாக செய்ய கூடாது என்பதால், ஒரு கற்றலோடும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதத்திலும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம். நாங்க பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறோம். நீங்கள் எப்படிப்பட்ட தொழில் தொடங்கினாலும் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டியாக உங்களுக்கு துணையாக நின்று உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வோம், இதை தான் பிஸினஸ் புரோமோட்டராக செய்து கொண்டிருக்கிறோம். அதே போல் சொத்துக்கள் பராமரிப்பு, பொது வர்த்தகம் போன்றவற்றை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருப்பது போல் தற்போது மீடியா மேனஜ்மெண்ட் துறையிலும் நாங்கள் நுழைந்திருக்கிறோம், இதையும் நாங்கள் சிறப்பாக செய்வோம். இதற்கான ஆரம்ப புள்ளி தான் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’.” என்றார்.

அந்தோணி தாசன் பேசுகையில், “மிகவும் சந்தோஷாம இருக்கு, கிளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன், ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குநர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன், கடவுளுக்கு நிகராக இருக்கும் ஊடகத்தாரையும், ரசிகர்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன். குளோப் நெக்சஸின் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் பங்கேற்று வெற்றிகரமாக வாய்ப்புகளை பெற வேண்டும். எனக்கு கூட நிறைய பேர் போன் செய்து, நான் நல்லா பாடுவேன், நடனம் ஆடுவேன் என்று சொல்வார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு சரியான தளம் அமையவில்லையே என்று நான் நினைத்தது உண்டு, தற்போது அப்படி ஒரு தளத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்ததில் மகிழ்ச்சி. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button