
ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது “வீரபாண்டியபுரம்”. முதல் முறையாக இசையமைப்பாளராக இப்படத்தின் மூலம் நடிகர் ஜெய். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் என்ன மாதிரியான ரசிகர்களை கவர்ந்தது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
இரு கிராமங்களுக்கிடையே சில நாட்களாக மோதல் இருந்து வருகிறது. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவனாகவும், மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நாயகன் ஜெய் மற்றும் நாயகியாக வரும் சரத்’தின் மகள் மீனாட்சி இருவரும் காதலிக்கிறார்கள். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்கிறார்கள். ஆனால், ஜெய் மனம் திரும்பி தந்தையின் சம்மதத்தோடு தான் நம் திருமணம் என்று கூறி, இருவரும் சரத் இடத்திற்கு வருகிறார்கள்.
முதலில் இருவரையும் ஆதரிக்கும் சரத், பின்னர் ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார் சரத்.
சரத் மற்றும் அவரது தம்பிகள் மூவரையும் கொலை செய்யவே அந்த வீட்டிற்குள் மாப்பிள்ளையாக நுழைந்திருக்கிறார் ஜெய் என்பது அதன்பிறகு தெரிய வருகிறது.
ஜெய் எதற்காக சரத் மற்றும் அவரது தம்பிகளை கொலை செய்ய நினைக்க வேண்டும்,.? ஜெய் யார்.? இரு கிராமத்திற்குள்ளும் என்ன பிரச்சனை.? ஹெய்யின் பின்புலம் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜெய், சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு மிரட்டலான நடிப்பை இப்படத்தில்கொடுத்திருக்கிறார். படபடப்பு, கோபம், ஆத்திரம் என பல கோணங்களில் தனக்கான இடத்தை தன்னிறைவாக செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசரடித்திருக்கிறார்.
கென்னடி கிளப் படத்திற்கு பிறகு நடிப்பில் ஒரு நல்ல முன்னேற்றம் தெரிகிறது நாயகி மீனாட்சியிடம். வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம்.
மற்றொரு நாயகியாக வந்த அகன்ஷா சிங், அழகில் சொக்க வைக்கிறார். நடிப்பிலும் மிளிர வைத்திருக்கிறார்.
சரத், ஜெயபிரகாஷ், ஹரீஷ் உத்தமன், அர்ஜெய், முத்துக்குமார் என வில்லன் கேரக்டராக தோன்றிய அனைவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பல கதாபாத்திரங்கள் வந்து செல்வதால், 2 மணி நேரத்தில் அனைவருக்கும் சரிசமமான நடிப்பை கொடுத்து சமாளித்து வைத்திருக்கிறார் இயக்குனர். காளி வெங்கட்டின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது.
முதல் முறையாக இசையமைப்பாளராக இறங்கி பாடலில் அசத்தியிருக்கிறார் ஜெய். பின்னனி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு இது சற்று பலமாகவே உள்ளது.
வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு காட்சிகளை கச்சிதமாக காண்பித்திருக்கிறது. காசி விஸ்வநாததின் எடிட்டிங்க் ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.
குடும்ப ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்த இயக்குனர் சுசீந்திரன், இப்படத்தில் வெட்டு, குத்து, என இரத்தத்தால் தெளித்து அனைவரையும் ஓட வைத்துவிட்டார். திரைக்கதையில் ஓட்டம் இருந்தாலும், கதையில் பெரிதான ஈர்ப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆங்காங்கே எட்டி பார்த்த ட்விஸ்டுகள் ரசிக்கும் படியாக இருந்தது .
மற்றபடி, வீரபாண்டியபுரம் – இரத்த புரமாக காட்சியளித்துள்ளது.





