
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த அமல் நாளை முதல் நடைமுறையில் இருக்கும்.
இதனால், கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கொண்டனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் தமிழகத்தில் மது விற்பனை 215 கோடி ரூபாயை தாண்டியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை மற்றும் நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையெடுத்து அங்கு சென்ற ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த 742 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.




