
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைகள் தமிழில் அவ்வப்போது வந்தாலும், கடைசி வரை பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் படங்கள் அரிது. அந்த வகையில் இரட்டையர் திரைப்படம், குடும்ப உறவுகள், மனநிலை மாற்றங்கள் மற்றும் மர்மங்களை கலந்து வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறது.
கணவர் மற்றும் இரட்டை மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழும் அபிநயாவின் வாழ்க்கை, ஒரு விபத்தால் தலைகீழாக மாறுகிறது. கணவரை இழந்த சோகத்துடன், முகத்தில் கடுமையான காயம் காரணமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வீட்டிற்கு திரும்பும் அபிநயாவை, அவரது சொந்த குழந்தைகளே ஏற்றுக்கொள்ள மறுப்பது கதையின் முக்கிய மையமாக அமைகிறது.
“இவர் உண்மையில் எங்கள் அம்மாவா?” என்ற கேள்வியை குழந்தைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் மனதில் கேட்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, ஒவ்வொரு காட்சியிலும் சந்தேகங்களை விதைத்துக் கொண்டே செல்கிறது.
அபிநயா தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். முகத்தை மறைத்தபடியே கண்கள் மற்றும் உடல் மொழி மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக குழந்தைகளிடம் கோபத்தையும், உள்ளுக்குள் இருக்கும் வலியையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் அவர் தனது அனுபவத்தை நிரூபிக்கிறார்.

அனுமிதா மற்றும் அனுஷிதா இருவரும் கதையின் முக்கிய தூண்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் பயம், குழப்பம், சந்தேகம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். சில காட்சிகளில் அவர்களின் நடிப்பே கதையின் பதற்றத்தை அதிகரிக்கிறது.
சுப்ரமணிய சிவா நடித்திருக்கும் உறவினர் கதாபாத்திரம் படம் முழுவதும் ஒரு மர்மத்தை உருவாக்குகிறது. அவர் உண்மையில் நல்லவரா? இல்லை வேறு ஏதாவது நோக்கம் உள்ளதா? என்ற கேள்வியை திரைக்கதை தொடர்ந்து உயிருடன் வைத்திருக்கிறது.
இயக்குநர் ஜெகதீஷ் தம்பையா, கதையின் முக்கிய பலமாக சஸ்பென்ஸ் அம்சத்தை பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன.
ஜிகேவியின் பின்னணி இசை படத்தின் மர்ம உணர்வை அதிகரிக்கிறது. அமைதியான காட்சிகளில்கூட பதற்றத்தை உருவாக்கும் வகையில் இசை அமைந்துள்ளது. முகமது அமீனின் ஒளிப்பதிவு, மலைப்பகுதி பங்களாவின் தனிமையையும், மர்மமான சூழலையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கிளைமாக்ஸ். ஆரம்பத்தில் சாதாரண குடும்பக் கதையாக தோன்றும் விஷயம், இறுதியில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தை எடுக்கும் விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
பிளஸ்
✅ அபிநயாவின் வலுவான நடிப்பு
✅ குழந்தை நட்சத்திரங்களின் இயல்பான பங்களிப்பு
✅ சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை
✅ பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
✅ எதிர்பாராத கிளைமாக்ஸ்
மைனஸ்
ஒரு காட்சியில் சிசிடிவி பார்த்து ஓடி வரும் சுப்ரமணிய சிவா, அடுத்த காட்சியில் அதனை பயன்படுத்தாமல் இருந்தது எப்படி.?
இரட்டையர் – முகம் மாறியது யார்? மனம் மாறியது யார்? என்ற கேள்விக்கான சுவாரஸ்யமான பதில்!





