
தமிழ் திரையுலகின் மகத்தான படைப்பாளியும், “இயக்குநர் இமயம்” என போற்றப்பட்ட பாரதிராஜாவின் மறைவு கலை உலகையே உலுக்கியுள்ளது. அவரின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள உருக்கமான கவிதை அஞ்சலி, ரசிகர்களையும் திரையுலகினரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
“முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த கவிதையில், பாரதிராஜாவை “கிராமத்து ராஜா”, “மண் வாசனையின் மன்னன்”, “தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றிய கலையாளன்” என்று புகழ்ந்துள்ளார்.
திரையுலகின் அடைக்கப்பட்ட கதவுகளை திறந்த வெளிக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா என்றும், எண்ணற்ற நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு புதிய முகத்தைக் கொடுத்தவர் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நீ தூரிகை, நான் வண்ணம்; நான் தூரிகை, நீ வண்ணம்” என்ற வரிகள் மூலம் இருவருக்குமிடையேயான கலைப்பயணத்தின் ஆழமான உறவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
“இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்?”, “எங்கே பாரதிராஜா?” என்று இயற்கையையே கேள்வி கேட்கும் வகையில் அவர் எழுதியுள்ள வரிகள், பாரதிராஜாவின் இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிரதிபலிக்கின்றன.
பாரதிராஜா மற்றும் வைரமுத்து இணைந்து தமிழ் சினிமாவிற்கு வழங்கிய எண்ணற்ற படைப்புகள் ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் நிலையில், இந்த கவிதை அஞ்சலி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.





