
தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குநரான “இயக்குநர் இமயம்” பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் இனிய தமிழ் மக்களே…” என்ற தனது தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தென்பாண்டி சிங்கமான பாரதிராஜாவின் மறைவு மனதை வாட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “16 வயதினிலே’ படத்தில் மயிலை படைத்தவர், ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் கிராமத்து வாழ்வை திரையில் கொண்டுவந்தவர், ‘புதிய வார்ப்புகள்’ மூலம் புதிய பாதையை உருவாக்கியவர், ‘சிகப்பு ரோஜாக்கள்’ விதைத்தவர், ‘மண்வாசனை’யை பரப்பியவர், ‘கிழக்கு சீமையிலே’ என கிளர்ந்தெழுந்தவர், ‘முதல் மரியாதை’ கண்டவர், தமிழ் திரையுலகின் தலைசிறந்த மரியாதையை வென்றவர்” என பாரதிராஜாவின் திரைப்பட பயணத்தை நினைவுகூர்ந்தார்.
பாரதிராஜாவின் மறைவு செய்தி “ஈட்டி போல் மனதை தாக்குகிறது” என்றும், “நெஞ்சம் தாங்கவில்லை, எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை” என்றும் டி.ராஜேந்தர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, பாரதிராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் மற்றும் தென்னிந்திய ரசிகர்களுக்கும் தனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்ததுடன், “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.





