Spotlightசினிமா

மும்தாஜ் கேரியரை காலி செய்த பிஆர்ஓ; சீக்ரெட் சொன்ன பாபு கணேஷ்

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார்.

‘370’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், உலக ஆண் அழகன் போட்டியில் 6 வது இடம் பிடித்த ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பெங்காலி நடிகை மெகாலி, நிஷா, உலக அழகி பட்டம் பெற்ற திருநங்கை நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக பெசண்ட் நகர் ரவி, கராத்தே கோபால், ராஜ்கமல், வெற்றி, சிவன் ஸ்ரீனிவாசன், ரோஜா, போகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார்.

சுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாக்குவார் தங்கம், விஜய் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரமாதேவி மற்றும் அபிநயஸ்ரீ நடனம் அமைத்துள்ளனர்.

வெறும் 48 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் இப்படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் நம் இந்திய தேசத்திற்கான படமாகவும் உருவாகியிருக்கிறது.

தற்போது படத்தை முடித்துவிட்டு, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாபு கணேஷ் முதல் முறையாக நேற்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தாணு கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது… “பாபு கணேஷ் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த புதிய சாதனை ஆச்சரியமாக இருக்கிறது.

48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்திருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்திருப்பார். புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் பாபு கணேஷ் போன்றவர்களிடம் திட்டமிடுதல் குறித்து கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த ‘370’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாபு கணேஷ்…

“இப்படி ஒரு படம் நான் எடுக்கப் போகிறேன், என்ற போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது முடியுமா? என்றும் கேட்டார்கள், ஏன் படத்தில் நடித்தவர்களுக்கே அந்த சந்தேகம் இருந்தது. சரியான திட்டமிடுதல் இருந்தால் நிச்சயம் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

இந்த படத்தி ஹீரோவாக நடித்திருக்கும் ரிஷிகாந்த் (பாபு கணேஷின் மகன்), கமாண்டோ வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் காட்டிய ஈடுபாட்டை பார்த்து நானே அசந்துவிட்டேன்.

இந்த படம் ரிலீஸான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ரிஷிகாந்தை ஹீரோவாக வைத்து படம் பண்ண விரும்புவார்கள். அதேபோல் நாயகி மெகாலியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் தங்களின் கால்ஷீட் விஷயம்பற்றி நேரடியாக தயாரிப்பாளர், இயக்குனரிடம் பேச வேண்டும். அவர்களது பிஆர்ஒ விடம் பேசினால் அது சில நேரம் செட்டாகாது.

இப்படித்தான் மும்தாஜ் என்ற நடிகை இருந்தார். அவரது பட வாய்ப்பு அவரது பிஆர்ஓவினா லேயே காணாமல் போய்விட்டது.

நேரடியாக தயாரிப்பாளரிடம் பேசாததால் இன்று மும்தாஜ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.” என்றார்.

நாயகி மெகாலி பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசினார். அப்போது இந்த 370 படத்தை பாரத பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக பேசினார்.

Babu Ganesh talks about Mumtaj and her PRO in 370 press meet

Facebook Comments

Related Articles

Back to top button