
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் பிரபல நடிகர் ஜெயபிரகாஷின் மகனான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்விழாவில், தயாரிப்பாளரும் திரைப்பட பைனான்சியருமான அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அன்புச்செழியன், ”வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும்.
20வருடத்திற்கு முன்பு பட ரிலீஸுக்கு வாங்கிய பணத்தை இன்று வரை தரமுடியாமல் இருக்கிறார் ஜெயபிரகாஷ். அலுவலகத்திற்கு கூப்பிட்டால் வருவார். ஆனால், படம் ரிலீஸ் செய்வது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு தான் தெரியும்.
இப்படத்தின் தயாரிப்பாளரின் உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகிறது.
வருணன் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நிறைய ஓடிடி தளங்கள் இருந்தாலும் சினிமா வியாபாரம் என்பது சுமார் தான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் ‘வருணன்’ படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
அன்புச்செழியன் மேடையிலேயே ஜெயப்பிரகாஷ் தனக்கு ஒரு கடனாளி என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.





