
இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் மிகப்பெரும் தொழிலதிபருமான “சரவணன்” நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “தி லெஜெண்ட்”. இப்படத்தை சரவணனே தயாரித்திருக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹரீஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
கதைப்படி,
உலகின் நம்பர் ஒன் மருத்துவ விஞ்ஞானியாக வருகிறார் சரவணன். தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருந்து சென்று இந்தியாவிற்கே பெருமை சேர்க்கிறார். கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய எண்ணி தனது கிராமத்திற்கே வருகிறார் சரவணன்.
தனது இளம் வயது நண்பனான ரோபோ சங்கரை சர்க்கரை நோயிற்காக இழக்கிறார் சரவணன். இதனால், மிகுந்த மன வேதனைக்கு ஆளாகும் சரவணன், சர்க்கரை நோய்க்கு நிரந்த தீர்வு காண மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் சரவணன்.
அதன்பிறகு அவரது வாழ்வில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆக்ஷன் காட்சியில் தனது எண்ட்ரீயை கொடுக்கிறார் சரவணன். ஆரம்ப காட்சியிலேயே மிகவும் பிரம்மாண்டமான ஒளிப்பதிவோடு படம் ஆரம்பமாகிறது. கிராமம் தான் என்றாலும், எந்த இடத்திலும் கிராமம் தெரியாமல் போனது தான் சோதனை.
நாயகி வாத்து மேய்ப்பதும், நாயகன் வெளிநாட்டில் படித்து கிராம சேவை செய்ய வருவதும், கல்லூரியில் அடாவடி செய்யும் மாணவர்களை அடித்து திருத்துவது, நாயகி வீடு தீ’க்கு இரையாவதும், நாயகிக்கு நாயகன் வீட்டில் அடைக்கலம் கொடுப்பதும் என பல படங்களின் காட்சிகளை கோர்வையாக்கி லெஜண்ட் என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.
துணிக்கடை ஓனர் என்பதாலோ என்னவோ படம் முழுக்க அழுக்கு படியாத, மிகவும் உயர்ந்த உடையைத் தான் அணிந்து வருகிறார் நாயகன். ஒவ்வொரு காட்சியிலும் பொம்மை போல நடந்து வந்து நம்மை சோதனையின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று விட்டார் நாயகன் சரவணன். வசனக் காட்சியை உச்சரிக்கும் இடத்தில் மட்டுமே சற்று ஆறுதல் கொடுத்திருக்கிறார் சரவணன்.
ஆக்ஷன் காட்சியில் அதிரடி காட்டியிருந்தாலும், “மாப்ள இவர் தான்.. ஆனா இவர் போட்ருக்குற சட்டை இவரோடது இல்லை”ன்னு படையப்பா படத்துல வர்ர சீன் தான் ஞாபத்துக்கு வந்து வந்து போகுது.
காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவு மட்டும் சற்று நமக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஹேரீஷ் ஜெயராஜின் பின்னணி இசை சண்டைக் காட்சியில் மிரட்டலை கொடுத்திருக்கிறது.
கிராமத்தின் காட்சிகளுக்கும் அந்த மிரட்டலான இசை தேவைதானா ஹேரீஷ் அவர்களே.? பஇவரும் பல படங்களின் பின்னணி இசை எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறது.
நடிகர்கள் பட்டாளம் மிகப்பெரும் அளவில் இருப்பதால், யாருக்கும் பெரிதான ஸ்கோப் படத்தில் இல்லாமல் போனது. ரோபோ சங்கர் வழக்கம் போல் தனது ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சியை நசுக்கி விடுகிறார்.
கதையில் சிறிது அல்ல பெரிதாகவே கவனம் செலுத்தியிருக்கலாம்.
”பேசாம அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி” என்று சொல்வது போல ”பேசாம கல்லாப்பெட்டிலேயே உட்கார்ந்துடுங்க சரவணன்” என்று தான் கூறத் தோன்றுகிறது. ஆனால், யார் என்ன சொன்னாலும், இதை விட இரண்டு மடங்கு செலவு செய்து அடுத்ததாக ஒரு படத்தை எப்படியும் உருவாக்கத் தான் போகிறீர்கள். அடுத்த படமாவது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடிப்பிலும் கொஞ்சம் தேர்ச்சி பெற்றும் படத்தை உருவாக்குங்கள் என்று கூறிக்கொண்டு..
இத்தோடு விமர்சனத்தை முடிச்சிக்கலாம்..
தி லெஜண்ட் – பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்…



