
கோவை: கோவையில் உள்ள எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்குப் பணிபுரியும் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுப்ரமணியம், அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் சுப்ரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளனிடம், கூறியுள்ளார். ஆனால் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நளன், அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கப்போவதாகக் கூறியதை அடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், ரகசியமாக தன் செல்போன் கேமராவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை படம் எடுத்துள்ளார். பின்னர் இது குறித்து கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும், பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குநர் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் புகார் தெரிவித்துள்ளார். இத்தகவல் தெரியவந்ததையடுத்து அப்பெண்ணைக் கல்லூரி நிர்வாகம் பணியை விட்டு நீக்கியுள்ளது. இதையடுத்து நிர்வாக இயக்குனர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



