![](https://tamilveedhi.com/wp-content/uploads/2024/05/inga-naan-thaan-kingu-movie-review-and-rating.jpg)
ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், சுவாமிநாதன், மனோபாலா, சேசு, மாறன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “இங்க நான் தான் கிங்கு”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஓம் நாராயண். மேலும் இசையமைத்திருக்கிறார் டி இமான். படத்தொகுப்பு செய்திருக்கிறார் தியாகராஜன்.
பிரபல பைனான்சியர் ஜி என் அன்புசெழியன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணிக்கலாம்…
நாயகன் சந்தானம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறா. தாய் தந்தை இல்லாத சந்தானம், ஒரு குடியிருப்பு ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.
இதில் அவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் ஏற்படுகிறது. இந்த கடனை யார் தீர்க்கிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்வதென முடிவெடுத்து ஓடுகிறார். தொடர்ந்து பெண் வேட்டையில் இருக்கும் சந்தானத்திற்கு இரத்திரன்புரம் ஜமீன் சம்மந்தம் கிடைக்கிறது. ஜமீன் குடும்பத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார் சந்தானம்.
ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று சந்தானத்திற்கு பெரும் மரியாதை செய்கின்றனர். ஜமீனுக்கு சொந்தகாரராக வருகிறார் தம்பி ராமையா. இவருக்கு பால சரவணன் மகனாகவும் ப்ரியாலயா மகளாகவும் வருகின்றனர்.
ப்ரியாலயாவை நிச்சயம் அன்றே திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். திருமணம் முடிந்த மறுகணம் தான் சந்தானத்திற்கு தெரிகிறது ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வங்கி எடுத்துக் கொள்கிறது.
இதனை அறிந்து மனம் உடைகிறார் சந்தானம். தொடர்ந்து வேறு வழியின்றி, தனது மனைவி ப்ரியாலயா, மாமனார் தம்பி ராமையாவையும் மச்சினன் பால சரவணனை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார் சந்தானம்.
வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து வரும் சந்தானம், இவர்களை வைத்துக் கொண்டு கடன் பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சந்தானம், தான் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் படத்தின் காமெடி ஓட்டத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சந்தானத்தின் எனர்ஜி லெவல் எந்த இடத்திலும் குறையாமல் இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
நாயகி ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்ப்ரஷனை ஆங்காங்கே கொடுத்து இளம் ரசிகர்களின் மனதில் பக்கென பற்றிக் கொண்டார் ப்ரியாலயா.
பாலசரவணன், தம்பி ராமையா, மாறன், விவேக் பிரசன்னா என படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.
மறைந்த மனோபாலாவின் நடிப்பும் படத்தின் காமெடி காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
திரைக்கதையின் வேகம் படத்தினை அதிகமாகவே ஈர்க்க வைத்திருக்கிறது. இமானின் பின்னணி இசை மற்றும் ஓம் நாராயணின் ஒளிப்பதிவு இரண்டும் இரு பெரும் தூண்களாக படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது.
தீவிரவாத காட்சிகள் படத்திற்கு எந்த இடத்திலும் சப்போர்ட் இல்லாமல் தனியாக இருப்பதால் படத்தில் அது ஒரு குறையாக எட்டிப் பார்த்துச் செல்கிறது. என்னதான் குறைகள் சில இருந்தாலும் காமெடி அரட்டைகள் அரங்கம் முழுவது அதிர வைத்திருப்பதால் குறைகள் அனைத்தும் நிறைவாக மாறிவிடுகிறது.
மொத்தத்தில்,
இங்க நான் தான் கிங்கு – வசூல் வேட்டையிலும் கிங்கு தான்..