![](https://tamilveedhi.com/wp-content/uploads/2023/08/jailer-movie-review-1.jpg)
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ”ஜெய்லர்”. படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை ஜெயிலர் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
ரிட்டையர்டு ஜெயிலராக வரும் ரஜினிகாந்திற்கு மனைவியாக வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் மகனாக வருகிறார் வசந்த் ரவி. போலீஸ் ஆபிசராக இருக்கிறார். வசந்த் ரவியின் மனைவியாக மிர்னா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை.. இதுதான் ரஜினிகாந்தின் குடும்பமாக காட்டப்படுகிறது.
சிலை கடத்தல் மன்னனாக வருகிறார் விநாயகன். கோவில்களில் இருக்கும் பழமையான சிலைகளை கடத்தி தொழிலாக செய்து வருகிறார் வில்லனாக வரும் விநாயகன். வசந்த் ரவி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
ஒருநாள், வசந்த் ரவி கடத்தப்பட்டு விடுகிறார். இதனால், உடைந்து போகும் ரஜினிகாந்தின் குடும்பம், வசந்த் ரவி இறந்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில்இருந்து கூறப்படுகிறது.
மகனை நேர்மையாக வளர்த்ததால், அவனை இழந்து விட்டோம் என குமுறிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், தன் மகனை கொன்றவர்களை பழி வாங்கச் செல்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது.? யார் யாரையெல்லாம் ரஜினிகாந்த் சந்தித்தார்..?? க்ளைமாக்ஸில் என்ன நடந்தது..??? என்பதே படத்தின் உண்மையான கதை…
ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த படத்தையும் தனி ஒருவனாக தன் தோள் மீது சுமந்து நிற்கிறார் ரஜினிகாந்த். ஆல் ஏரியாவிலும் தலைவர் கிங் தான் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது ரசிகர்களை அளவு கடந்து திருப்தி படுத்தும் அளவிற்கு தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் யதார்த்த காமெடிகள் ரசிக்கும்படியாக இருந்தது கூடுதல் சிறப்பு.. ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன், கோபம் என கிடைக்கும் அனைத்து இடங்களிலும் இறங்கி அதகளம் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்றுமே நிரந்தரமான சூப்பர் ஸ்டார் என்று தனது நடிப்பின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், மிர்ணா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். முதல் பாதியில் படத்தின் மிகப்பெரும் பலமாக நின்றது யோகிபாபு.. வழக்கமான கெளண்டர் காமெடியில் சரவெடியா வெடித்திருக்கிறார்.
வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார் விநாயகன். கண் பார்வையிலும், தனது உடல் மொழியிலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார் விநாயகன். ஹீரோவுக்கு ஏற்ற சரியான வில்லனாக தோன்றி அசர வைத்திருக்கிறார் விநாயகன்.
சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்கை அதிர வைத்திருக்கிறார்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப். இவர்கள் மூவரும் திரையில் தோன்றும் போது விசில் சத்தம் விண்ணை முட்டுகிறது.
வசந்த் ரவி இன்னும் சற்று தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் திரைக்கதையை இன்னும் சற்று வேகம் காட்டியிருந்திருக்கலாம். இதையெல்லாம், க்ளைமாக்ஸ் துவம்சம் செய்யும் அளவிற்கு பரபரப்பாகவும், ட்விஸ்ட் காட்சிகளுடனும் படம் சென்றது படத்திற்கு ப்ளஸ்.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நெல்சன் படத்தில் இருக்கும் வழக்கமான ஒளியே இப்படத்திலும் ஒளித்திருக்கிறது., அனிருத்தின் இசை படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக நிற்கிறது. காவாலா பாடல் ஆட்டம் போட வைத்துள்ளது. பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அனிருத்.
மொத்தத்தில் ,
ஜெயிலர் – ஆவேசமான ஆட்டம்..