மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது கர்ணன். இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘ கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இப்பாடலின், காட்சியில் தனுஷின் உருவப்படம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அது அச்சு அசலாக மேலவளவு முருகேசன் உருவம் போன்று வரையப்பட்டுள்ளது.
ஒருவேளை கர்ணன் படம் மேலவளவு முருகேசன் கதையாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
யார் இந்த மேலவளவு முருகேசன் ..??
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அருகேயுள்ளது மேலவளவு கிராமம். இதன் ஊராட்சி தலைவர் தான் தலித் சமுதாயத்தை சேர்ந்த முருகேசன்.
இவர் தலித் மக்களுக்காக போராடியவர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மேலவளவு ஊராட்சி தலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், அதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் முருகேசன் .
அதன் பின்பு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய முருகேசனையும், அவருடன் வந்த 7 பேரையும் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
முருகேசனின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் வீசியிருந்தார்கள்.
இந்த படுகொலை சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. சாதிக் கொடுமைகளின் உச்சமாக இந்த படுகொலை சம்பவம் பார்க்கப்பட்டது.
இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. சில வருடத்திற்கு முன், அதிமுக அரசால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை வைத்து தான் ‘கர்ணன்’ படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் கூறிவருகின்ற்னர்.
பல சமூகத்தை சேர்ந்தவர்கள் கர்ணன் படத்திற்கு எதிர்ப்புகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.