ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வெள்ளியன்று (24/09/21) திரைக்கு வர இருக்கும் படம் தான் “பேய் மாமா”.
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு மலைப்பகுதியின் நடுவில் ஒரு காட்டு பங்களா. அந்த பங்களாவையும் 100 ஏக்கர் இடத்தையும் விற்பேன் என்று வில்லன் ஒருவன் ஒரு பக்கம், அந்த இடத்தை விற்க விட மாட்டேன் என்று இரண்டாம் வில்லன் மறுபக்கம்.
அந்த பங்களாவில் பேய்கள் நடமாட்டம் அதிகம் என்று கதைகளை கட்டவிழ்த்துவிட்டு பங்களா பக்கம் யாரும் நெருங்க முடியாதபடி செய்கிறார் இரண்டாம் வில்லன்.
அந்த பேய்களை நான் விரட்டி அடிக்கிறேன் என்று, திருட்டு தொழில் செய்யும் யோகி பாபுவின் குடும்பம் தாங்கள் பேய்களை விரட்டும் சாமியார்கள் என்று அந்த பங்களாவிற்குள் நுழைகிறார்கள்.
அந்த பங்களாவில் உண்மையாகவே பேய் இருக்கிறதா.? இல்லையா.? அந்த பங்களாவையும் 100 ஏக்கர் இடத்தையும் எதற்காக அபகரிக்க நினைக்கிறார்கள்.? என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் யோகிபாபு. ஒரு சில காமெடிகள் நிஜ வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்களை கலாய்த்து தள்ளியிருக்கிறார். பல இடங்களில் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பை வர வைக்கிறார்.
இவருடன், ரமேஷ் கிருஷ்ணா, ரேகா, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, சாம்ஸ், எம் எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ரேஷ்மா, வையாபுரி என பலர் இருந்தும், படத்தில் காமெடிக்கு பெரும் போராட்டம் தான் நடக்கிறது.
பல படங்களில் பார்த்த, கேட்ட கதையை தான் அங்கங்கே மசாலாவை தூவி விட்டு, இது ஒரு புதுபடம் என நமக்கு படைத்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
ஒரு சில நேரத்தில் வில்லன்களே காமெடியன்களுக்கும் மேலாக காமெடி செய்கிறார். இவர்களை வில்லன் கதாபாத்திரமாக பார்க்கவா வேண்டாமா என்று குழப்பி விடுகிறார்கள்.
கதையில் பெரியதாக பலம் இல்லாததால், படத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. மொட்டை ராஜேந்திரன் & ரேகாவின் காம்பினேஷனும் காமெடிக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
படத்திற்கு சற்று ஆறுதல் என்றால் அது ஒளிப்பதிவு மட்டும் தான் .
பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.. பின்னனி இசை ஆங்காங்கே மிரட்டுகிறது..
பேய் மாமா – என்ன ஆச்சி யோகிபாபு மாமா ???