செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘NGK'(நந்த கோபால குமரன்). காலம் கடந்து வந்த இப்படம் தேறியதா இல்லையா என்று இப்போது பார்த்து விடலாம்.
நந்த கோபால குமரன் நமது கதாநாயகன் சூர்யா. பட்ட மேற்படிப்பு படித்து சில மாதங்கள் கார்ப்பரேட் கம்பெனியின் கீழ் வேலை செய்து விட்டு, அது பிடிக்காமல் வேலையை உதறி தள்ளிவிட்டு, தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயம் செய்ய வருகிறார். ஆர்கானிக் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அப்பகுதி மக்களிடையே பரப்புகிறார். மக்களிடையே நல்ல ஒரு பெயரையும் சம்பாதிக்கிறார்.
அப்பகுதியில் உள்ள சில வியாபாரிகள், கந்து வட்டி நபர்களின் பகையை வாங்கி கொள்கிறார். இந்த மோதலில் இருந்து தப்பிக்க அப்பகுதி எம் எல் ஏ’வின் உதவியை நாடுகிறார். அந்த எம் எல் ஏ-வும் சூர்யாவிற்கு உதவி புரிய, பதிலுக்கு சூர்யாவை தனது கட்சியில் சேர்ந்துவிடுமாறு வற்புறுத்துகிறார் அந்த எம் எல் ஏ.
வேறு வழியின்றி அக்கட்சியில் சேர்கிறார். அரசியலில் நடக்கும் சில கேலிக் கூத்துகளை கண்டு மனம் உடைகிறார். அதன் பிறகு தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் சூர்யா. அடிமட்ட தொண்டனாக இருந்து மேலெழுந்து சூர்யா தனது கொடியை நாட்டினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
சூர்யா, இதுவரை சூர்யா நடித்து வெளிவந்த படங்களில் மிகச் சிறந்த படம் என்றால் அது இது தான். நடிப்பில் உச்சம் தொட்டு விட்டார். பல காட்சிகளில் முக பாவனைகளை மாற்றி மாற்றி அவர் பேசும் போது திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது. சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாடக்கூடிய படமாக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சூர்யாவின் மனைவியாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும், கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
மற்றொரு நாயகியாக வரும் ரகுல் ப்ரீத் சிங் ஆங்காங்கே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.சூர்யா – ரகுல் காம்பினேஷனின் வரும் ‘அன்பே பேரன்பா…’ பாடல் கொள்ளை அழகாக இருக்கிறது.
மற்றபடி, உமா பத்மநாபன், பாலசிங், தேவராஜ், நிழல்கள் ரவி, பொன்வண்ணன், இளவரசு, தலைவாசல் விஜய், வேலா ராமமூர்த்தி, ஆகியோர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்தின் ஒரு பலம் என்றால் யுவனின் பின்னனி இசைதான். மிரட்டலான பின்னனி இசையோடு, பாடல்களையும் ரசிக்க முடிகிறது.