சிபி சத்யராஜ், நட்டி மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் இந்த ‘வால்டர்’.
கதைப்படி,
பாம்பே Blood என்ற அரியவகை இரத்தம் உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. இதனால், அந்த அரியவைகை இரத்தத்தோடு பிறக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள்.
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சிபி சத்யராஜ் அவர்களிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு, விசாரணை துவங்கப்படுகிறது.
இந்த வழக்கில் யார் எல்லாம் சிக்கினார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை…
சிபி சத்யராஜ் போலீஸ் உடையில் கம்பீரமாக, மிடுக்காக, வானுயரத்திற்கு நிமிர்ந்து நின்று தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். ஆனாலும், ஆங்காங்கே பெர்பார்மன்ஸ் குறைவாக இருந்ததையும் நாம் சுட்டிக் காட்டித் தான் ஆக வேண்டும்.
சமுத்திரக்கனிக்கு படத்தில் சரியான கதாபாத்திரம் என்றாலும், அதிக காட்சிகள் இல்லாததால் பெரிதாக கூற ஒன்றுமில்லை.
படத்திற்கு நட்டி மட்டுமே சரியான தேர்வு. படத்தில் அவர் எண்ட்ரீ ஆகும் காட்சியில் இருந்து கண்களில் தனது மிரட்டல் நடிப்பை காட்டியது வரை அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தனக்கே உரித்தான மேனரிஸத்தை காட்டி இரண்டாம் பாதி முழுவதிலும் மிரட்டியெடுத்திருக்கிறார்.
நாயகி படத்திற்கு தேவையே இல்லை போலும்., நாயகனுக்கு நாயகிக்கும் சரியான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை. அதிலும் காதல் பாடல்கள்:, சோக பாடல் என எதுவும் படத்தோடு ஒட்டாமல் பயணித்தது சற்று கடுப்பு தான்.
தர்மபிரகாஷின் இசையில் பின்னனி இசை மட்டுமே ஓகே ரகம். இராசமதியின் ஒளிப்பதிவில் படத்திற்கு பலமாக அமைந்தது.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு நடிப்பில் சரியான மெனக்கெடல் இல்லாதது சற்று வருத்தம் தான்.
லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தும் சென்றது. இயக்குனர் எடுத்த பாம்பே Blood என்ற மூலக்கதை தமிழ் சினிமாவிற்கு புதிது. அதை வரவேற்கலாம் என்றாலும் அதை சொன்ன விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். எடிட்டிங் இன்னும் சற்று ஷார்ப்பாக கொடுத்திருக்கலாம்.
வால்டர் – வேகம் ஏற்றியிருந்திருக்கலாம், இருந்தாலும் விவேகத்தோடு சென்று வால்டரை பார்த்து வரலாம்.