துல்கர் சல்மானும் ரக்ஷனும் நண்பர்கள்.. சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்லிக் கொண்டு ஆன்லைன் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் இருவரும்.
துல்கர் சல்மானுக்கு ரிது வர்மா மீது காதல் வர, ரக்ஷனுக்கோ நிரஞ்சனி மீது காதல் வருகிறது. நால்வரும் இணைந்து வெளியூர் சென்று வாழ்க்கையை நடத்த திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் திருட்டு வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரிக்க துவங்குகிறார் போலீஸ் அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன்.
துல்கர் சல்மான் மற்றும் ரக்ஷன் இருவரையும் கெளதம் வாசுதேவ் மேனன் நெருங்கி வரும் வேலையில் தான் அந்த திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…
தமிழ் சினிமாவில் துல்கர் சல்மான் சில படங்கள் நடித்தாலும், ‘த பெஸ்ட்’ திரைப்படம் என்று சொன்னால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். அளவெடுத்து செதுக்கியது போல் மிகவும் யதார்த்தமான நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டார்.
ஏற்கனவே இளைஞர்களின் ரசிகர்கள் பட்டாளத்தை கையில் வைத்திருக்கும் துல்கர் சல்மான், இப்படத்திற்கு பிறகு இன்னும் அதிகமான ரசிகர்களை தன் வசமாக்குவார்.
மிகவும் ஸ்டைலிஷாக தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்.
டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடித்து வந்த ரக்ஷன், இப்படத்தில் ஹீரோவுடன் முழுப்படத்திலும் தோன்றி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
இவரது, டைமிங் காமெடி திரையரங்குகளில் சிரிப்பலைகளை அள்ளி தெளிக்க வைத்திருக்கிறது. நிச்சயம் இன்னும் பெரிய உயரம் எட்டுவார்.
அடுத்த சிவகார்த்திகேயனாக வளரும் அளவிற்கான திறமை ரக்ஷனிடம் உள்ளதை இப்படம் வெளிக்காட்டியுள்ளது.
நாயகி ரிது வர்மா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார், தனது நடிப்பையும் அழகாக கொடுத்திருக்கிறார்.
நாயகியின் எண்ட்ரீ, இரண்டு பாடல்கள் என்ற மசாலா திரைப்படம் போல் இல்லாமல், கதையின் முக்கியமான திருப்புமுனையாக இருந்து கதையோட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி.
நிரஞ்சனியின் நடிப்பும் பேசப்படும்… அமைதியான பார்வையில் தோன்றி மிரட்டலான குரலில் ரசிகர்களை தன்வசப்படுத்துகிறார் போலீஸ் அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன். இவரது தோற்றத்திற்கும் பின்னனி இசைக்கும் மாஸான ஒரு சில காட்சியை வைத்து மிரட்டி எடுத்திருக்கிறார் இயக்குனர்.
கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவான மெனக்கெடல் கொடுத்ததனால் தான் இவ்வளவு அழகான ஒளிப்பதிவில் ஒரு அழகான சினிமாவை பார்க்க முடிந்தது.
மசாலா காஃபி & ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இவர்களது இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசை மிரட்டல் தான். ஒரு பிரம்மாண்ட படத்திற்கு இணையான பின்னனி இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கி எடுத்தாற் போல் அழகு படுத்தி வைத்திருக்கிறார். வசனங்கள், கதை, திரைக்கதை என்ற அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உயரத்தை நிச்சயம் எட்டுவார்.
மூன்று வருடத்திற்கு முன் வந்திருந்தால், நிச்சயம் இப்படம் உலக ரீதியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சரியான திட்டமிடல், சரியான ப்ரோமோஷனிற்கு இப்படத்தை இன்னும் கொண்டு சென்றால், துல்கர் சல்மானின் திரை வாழ்க்கையில் ப்ளாக் பஸ்டர் படமாக நிச்சயம் இது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நிச்சயம் நம் இதயத்தைகொள்ளையடிக்கும்.