
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
காதலையும், வாழ்வியலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் ,பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ”இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய ஏழு ஆண்டு கனவு இது. நாங்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்திருக்கிறோம். இந்தப் படைப்பை முழுவதும் அவர் தன் தோளில் சுமந்து நிறைவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால், அந்த வெற்றி முழுவதும் இயக்குநர் கார்த்திக்கைத் தான் சாரும்.” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும். ” என்றார்.
இயக்குநர் ரா கார்த்திக் பேசுகையில், ” நித்தம் ஒரு வானம் படத்தின் கதையை எழுதி, தற்போது படம் நிறைவடைந்திருக்கும் வரை ஏழு ஆண்டுகளாகி இருக்கிறது. ‘வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் காத்திரு’ என்பார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றது. எந்த நோக்கத்தில் இந்த படத்தின் கதையை எழுதினேனோ.. அதனை முழுவதுமாக.. நேர்த்தியாக படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். ” என்றார்.





