
தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ’36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இயக்கத்தில் கடந்த மாதம் மலையாளத்தில் ’சாட்டர்டே நைட்’ என்ற படம் வெளியானது.
அப்போது, படங்களை விமர்சனம் செய்பவர்களைக் கடுமையாகச் சாடி பேசிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் இப்போது பேசும்போது, “ 17 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. அவர்களின் விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் பேசினேன். படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகின்றனர். ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு, மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று ட்வீட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
யூடியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகின்றனர். அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள். நல்ல விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறைவு. தனிப்பட்ட விஷயங்களையும் விமர்சனத்தில் இழுக்கிறார்கள். மெஸ்சியின் ஆட்டம் மோசமாக இருந்தால், அதை விமர்சியுங்கள். அவருடைய தனிப்பட்ட விஷயத்தை ஏன் இழுக்க வேண்டும்? இவ்வாறு ரோஷன் ஆண்ட்ரூஸ் காட்டமாகக் கூறியுள்ளார்.





