
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் மற்றும் மழலை மித்துல் ரியான் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த பறந்து போ.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஏகாம்பரம்.
சென்னை மற்றும் பெரும் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கும் ஏரியா அனைத்துமே வளர்ச்சி என்ற பெயரில் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஒரு வாழ்க்கையைத் தான் மக்கள் வாழத்துவங்கியிருக்கிறார்கள்.
அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் அனைத்தும், தங்களது குழந்தைகளை வீட்டின் கதவிற்கு உள்ளேயே அவர்களது சுதந்திரத்தையும் அவர்களது வாழ்க்கையையும் அடைத்து விடுகின்றனர்.
இயற்கையின் சூழல் எவ்வளவு அழகானது, அதில் வாழும் மக்களின் சுதந்திரம் எப்படி இருக்கும் என்று அப்பார்ட்மெண்ட்டில் வாழும் குழந்தைகள் அறிய வாய்ப்பில்லாமலே சென்று விடுகிறது.
கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிற்கும் கிளிகளாக அந்த குழந்தைகள் எந்த வித சந்தோஷத்தையும் காணாமல், அப்படியொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியாமலே இருக்கின்றனர். அதையும் தாண்டிச் சென்றால் சமூக வலைதள பக்கத்தில் அதனைக் கண்டு கடந்து செல்பவர்கள் தான் ஏராளம்.
கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்களுக்கு அதுவல்லடா வாழ்க்கை இதுதான் வாழ்க்கை என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல், இயக்குனர் ராம் கூறியிருக்கும் படம் தான் இந்த “பறந்து போ”,
மிர்ச்சி சிவா தனது உடல்மொழிக்கு ஏற்றவாறு தனது காமெடித் திறனை அளவாக பயன்படுத்தி நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
சிவாவின் மனைவியாக கிரேஸ் ஆண்டனி, சிவாவின் தோழியாக அஞ்சலி, அஞ்சலியின் கணவராக அஜு வர்கீஸ் என அனைவருமே கதையின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக தோன்றி தங்களது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அதிலும் மகன் மித்துல் ரியானின் குறும்புத்தனம் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் தயாநிதியின் இசையில் சுமார் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படத்தோடு பாடல்கள் மனதை உருக வைக்கும்படியாக பயணமாவதால், அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறது.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு தனி மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. மொத்தத்தில்,
பறந்து போ – மனதை பறக்க வைக்கிறது…





