
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திரைப்பட மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி,முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
இதுவரை சென்னையில் பல கட்டமாக சுமார் ஆயிரம் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து தமிழ்நாடு முழுக்க இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் பூச்சி முருகன் ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இன்று காலை நேரில் சந்தித்து அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை லாட்ஜ் சத்சங் மசோனிக் சாரிடபள் டிரஸ்ட் ஏற்பாட்டில் வழங்கி நலம் விசாரித்தார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் நகர செயலாளர் ராணா ஆனந்த், மாநில இலக்கிய அணி புலவர் மணிமாறன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கவுதம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்ததுடன் முன்னிலை வகித்தனர். நடிகர்கள் சி.எஸ்.முத்துகிருஷ்ணன், செந்தில் குமார், என்பி.லதா, கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு முழுக்க இதுவரை சுமார் 2200 உறுப்பினர்களுக்கு மேல் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நியமன செயற்குழு உறுப்பினர் எம்கே.ரெத்தினப்பா, புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க துணைத்தலைவர் கேபிஏ.காளிமுத்து மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பெருந்தொற்றால் நாடகத்திற்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதித்து நிற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்னை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள நாடக கலைஞர்கள் 120 நபர்களுக்கு 5 கிலோ அரிசியும் மளிகை பொருட்களும் வழங்கிய கலைஞர்களின் காவலர் எங்கள் பாசமிகு அன்பு அண்ணன் திரு.பூச்சிமுருகன் அண்ணார் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல மாவட்டங்களில் இது போன்ற பல உதவிகளை செய்து வரும் அண்ணார் அவர்களுக்கு அனைத்து கலைஞர்களின் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.










