
இந்தியா அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது இந்திய அணி.
முதலாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்தனர்.
முடிவில், ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சுத் தரப்பில் பும்ரா, அஷ்வின், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்திய நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவிற்கு வழங்கப்பட்டது. இவர் முதல் இன்னிங்ஸில் 123 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 71 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் தற்போது முன்னில்லை பெற்றுள்ளது. 2 அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.





