
இயக்கம்: கருப்பையா முருகன்
நடிகர்கள்: பிரேம் ஜி, திவா தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஞ்சித், சூப்பர் குட் சுப்ரமணி,
ஒளிப்பதிவு: சூராஜ் நல்லுசாமி,
இசை: ஜி கே வி
கதைப்படி,
தனது மனைவியை இழந்த தூக்கத்தில் தனது மகளை அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார் நாயகன் பிரேம்ஜி. மனைவி இழந்த துக்கத்தால் தனது செவித்திறனையும் இழக்கிறார் பிரேம்ஜி. செவியில் சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார்.
சென்னையில் மிகக் குறைவான ஒரு வாடகையில் தனது மகளை தங்க வைத்துக்கொண்டு தனது பிழைப்பை நடத்த தொடங்குகிறார். போஸ்டர் ஓட்டும் வேலை பார்க்கிறார் பிரேம்ஜி. தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மகள் தனது பிறப்புறுப்பில் ரத்தம் வந்ததாக கூற உடனே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்கிறார்.
அங்கு தனது மகள் பூப்பெய்து விட்டதாக டாக்டரிடம் கூறி அதற்கு என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கேட்க செல்கிறார் பிரேம்ஜி. மகளை பரிசோதித்த மருத்துவர் மகள் பூப்படையவில்லை எனவும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறுகிறார்.
இதனால் உடைந்து போகும் பிரேம்ஜி அடுத்து என்ன செய்தார் என்பதை படத்தின் மீதி கதை.

விமர்சனம்:
மிகவும் எளிமையான ஒரு இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் பிரேம்ஜி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இப்படியொரு கதாபாத்திரத்தில் இதற்கு முன் பிரேம்ஜி நடித்ததில்லை என்று தான் கூற வேண்டும்.
பிரேஜ்ஜி எங்கிருந்தாலும் அது திரையிலும் சரி திரைக்குப் பின்னாலும் சரி அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்படத்தில் ஒரு சிறுமியின் பொறுப்புள்ள தந்தையாக மிகவும் உருக்கமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
சினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அரிதான ஒரு கதை பிரேம்ஜிக்கு இப்படத்தின் வாயிலாக கிடைத்திருக்கிறது. அதை செவ்வெனவே செய்தும் முடித்திருக்கிறார் பிரேம் ஜி.
தான் ஏழை என்பதை உடுத்தும் உடையிலும் காண்பித்திருந்தால், அக்கதாபாத்திரத்தில் இன்னும் ஒன்றி போக உதவியாக இருந்திருக்கும்.
சிறுமியாக நடித்த திவாதர்ஷி மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருந்தார். தனது தந்தையோடு அமர்ந்து பேசும் இடத்திலாக இருக்கட்டும், தனது தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கவலைப்படும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சி ஆர் ரஞ்சித், க்ளைமாக்ஸ் காட்சிக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சரியாக செய்திருக்கிறார்கள்.
எது ப்ளாஷ் பேக் காட்சி எது நிகழ்கால காட்சி என்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டு விட்டது. கதையை விட்டு சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்குள் வந்தது சற்று சோர்வடையவைத்து விட்டது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பலம் தான்.
படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது வசனம் தான். ஆங்காங்கே, தனது வசனத்தின் மூலம் சாட்டையை சுழற்றியிருக்கிறார் இயக்குனர்.
குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் கதையின் கருவிற்காக படக்குழுவினரை பாராட்டலாம்.,
வல்லமை – வலி கொண்டவன்..



