விமர்சனங்கள்

‘மீலாதுன் நபி’ பயோபிக் திரைப்பட விமர்சனம்

‘மீலாதுன் நபி’ படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஏஐ கிரியேஷன் செய்து இயக்கி தயாரித்துள்ளார். நடிகர்கள் இல்லாமல் கதையின் பிரதான கதாநாயகன் முகம் காட்டாமல் ஒரு பயோபிக் திரைப்படம் உருவாகியுள்ளது அதுதான் இந்த ‘மிலாதுன் நபி

மில்லத் அகமது.காரைக்காலைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இப்போது சிங்கப்பூரில் பணிபுரிகிறார் .ஏற்கெனவே இவர் ‘ஆந்தை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மீலாதுன் நபி என்றால் நபிகள் பிறந்தநாள் என்று பொருள்.இஸ்லாமிய மார்க்கத்தின் நிறுவனராக இருக்கும் நபிகள் நாயகம் இறைத்தூதராக மதிக்கப்படுகிறார்.

நபிகளின் வாழ்க்கை, கொள்கைகள், போதனைகள் பற்றிய பயோபிக் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. உருவ வழிபாட்டுக்கு எதிரான ஒன்றாகவே இஸ்லாம் என்னும் சமயத்தை உருவாக்கியவர் அவர். தனக்கு எந்த உருவமும் கற்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர். எனவே நபிகளைத் திரையில் காட்ட முடியாது. ஆகவே அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் மூன்று பேர் கதை சொல்வது போல் இந்தப் படம் உருவாகி உள்ளது .இடையிடையே சம்பவங்களை விளக்கக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் விரிகின்றன. இந்தப்படத்தில் நபிகள் அவரது வாழ்க்கை சார்ந்து கூறும் பத்து பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

நபிகளின் கதையை இமாம் அப்துல் கையூம், இமாம் உமர், இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் திரையில் தோன்றிக் கூறுகிறார்கள். அதற்கு வலுவூட்டும் வகையில் நபிகள் பிறந்து வாழ்ந்த இடம், செய்த போர்கள் ,அவரைப் பற்றிய விமர்சனங்கள் ,எதிரிகளை எதிர்கொண்ட விதம் போன்றவை பற்றிய காட்சிகளும் வருகின்றன. அந்தக் காட்சிகள் கதை நிகழும் அந்தப் பாலைவனப் பிரதேசத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.

இஸ்லாம் ,இஸ்லாமியர் குறித்து நிலவி வரும் நம்பிக்கைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.முதியோரை மதிக்க வேண்டும், ஏழைகளுக்கு இரங்க வேண்டும் ,அருகில் பசித்திருக்க நாம் உண்ணக்கூடாது, ஐந்து வேளை தொழ வேண்டும், வாய்ப்பு உள்ளவர்கள் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும், வட்டி வாங்கக் கூடாது,தடை செய்யப்பட்ட மது, போதை மருந்து, விபச்சாரம் போன்றவை கூடாது, தந்தை மகன் இருவருக்குள்ளும் சண்டை கூடாது ,மனைவிக்குச் சம உரிமை கொடுக்க வேண்டும், அனைவரையும் மதிக்க வேண்டும், யாருக்கும் யாரும் மேல் கீழ் தன்மை கிடையாது, இஸ்லாம் யாரையும் மதத்தைத் தழுவ வேண்டும் என்று நிர்பந்திப்பதில்லை, எந்த மதமும் உயர்வு தாழ்வு என்று பார்க்கக் கூடாது போன்ற அவரது போதனைகள் கூறப்படுகின்றன.

இஸ்லாமியர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொண்டு கொள்ளலாம் என்கிற கருத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முதல் மனைவியின் இறப்பு, உடல்நிலை, குழந்தைப்பேறின்மை போன்ற அசாதாரண காரணங்களுக்கு மட்டுமே மறு திருமணம் ஏற்பு செய்யப்படுகிறது. முதல் மனைவி இருக்கும் போது திருமணம் செய்ய, முதல் மனைவியின் சம்மதம் கட்டாயம் என்றும் உள்ளதை எடுத்துக் கூறியுள்ளனர்.

இப்படி நபிகள் இஸ்லாம், இஸ்லாமியர் குறித்த எளிமையான சித்திரத்தை இந்த பயோபிக் திரைப்படம் அளிக்கிறது எனலாம்.

படத்தில் இடம்பெறும் பாடல்களை நாகூர் ஹனிபா மகன் நெளஷாத், பாடகர் சாகுல் ஹமீது தம்பி சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா, விஜய் சூப்பர் சிங்கர் பரிதா ஆகியோர் பாடியுள்ளனர்.

இஸ்லாமிய கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் பாடல்கள் ,பின்னணி என்று இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் எஸ். ஆர்.ராம்.

இயக்குநருக்குப் பக்கபலமாக இயங்கி ஒளிப்பதிவு செய்ததுடன், ஒரு சரளமான படத்தின் ஓட்டத்திற்கு உதவும் வகையில் படத்தொகுப்பும் செய்துள்ளார் லலித் ராகவேந்தர்.

இஸ்லாமியருக்குத் தங்கள் மதத்தைப் பற்றிய கூடுதல் புரிதல் ஏற்படவும், பிற மதத்தினருக்கு இஸ்லாம் குறித்த எளிய அறிமுகம் பெறவும் இந்தப் படம் உதவும் வகையில் அமைந்துள்ளது எனலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button