
ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘வேட்டை நாய்’.
ஒரு சில அடியாட்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவர் ராம்கி. இவர் வைத்திருக்கும் அடியாட்களில் முக்கியமான அடியாளாக இருக்கிறார் ஆர் கே சுரேஷ். ராம்கி கண் அசைத்தால் எதிரில் இருக்கும் பத்து பேரை பந்தாடக்கூடியவர் ஆர் கே சுரேஷ். மது கொடுத்து ஆர் கே சுரேஷை தனது கட்டுபாட்டிலே வைத்திருக்கிறார் ராம்கி.
இந்நிலையில், ஆர் கே சுரேஷ்க்கு நாயகி சுபிக்ஷாவை பார்த்தவுடன் காதல் வர, சுபிக்ஷாவின் விருப்பம் இல்லாமல் அவரை திருமணமும் செய்து கொள்கிறார்.
கணவனே கண் கண்ட தெய்வம் என சுபிக்ஷாவும் ஆர் கே சுரேஷின் மனைவியாக வாழ ஆரம்பிக்கிறார். ராம்கியிடம் அடியாளாக வேலை பார்ப்பதை சுபிக்ஷா வெறுக்கிறார்.
வேறு வேலை பார்க்க ஆரம்பிக்கிறார் ஆர் கே சுரேஷ்.
மனம் திருந்தி வாழ ஆரம்பிக்கும் ஆர் கே சுரேஷ்க்கு முன் செய்த தீவினைகள் அனைத்தும் மறுவினை எடுத்து துரத்த ஆரம்பிக்கிறது.
அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் கதை.
தாரை தப்பட்டை , மருது, படங்களில் முரட்டுத்தனமான வில்லனாக பார்த்த கண்களுக்கு இன்னமும் ஆர் கே சுரேஷை நாயகனாக பார்க்க மனம் ஏற்காமல் இருக்கிறது. கதைக்கு ஏற்ற கதாநாயகனாக மாறாமல், கதையோடு ஒன்றாமல் நிற்கிறார் ஆர் கே சுரேஷ். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.
படத்தில் சற்று ஆறுதல் நாயகி சுபிக்ஷா மட்டுமே. கவர்ச்சியை மட்டுமே காட்டி செல்லும் கதைகளில் நடித்து வரும் நாயகிகளுக்கு மத்தியில், கதைக்கேற்ற நாயகியாக வந்து செல்கிறார். படத்தின் கதை ஓட்டத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கிறார். பள்ளி மாணவியாக இருக்கட்டும், திருமண ஆன ஒரு பெண்ணாக வருவதாக இருக்கட்டும் இரண்டையும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
ராம்கியின் கதாபாத்திரம் செயற்கையாகவே இருப்பது கொஞ்சம் சறுக்கல். அடிக்கடி நடந்து மாஸ் காட்சிகள் ஏற்றி வைத்தாலும். மிரட்டலான வில்லனாக ராம்கியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படத்தின் முதல் பீமா படத்தினை பார்த்த ஒரு உணர்வும் இரண்டாம் பாதி பல படங்களில் பார்த்த உணர்வும் அதிகமாகவே ஏற்படுகிறது.
ஈஸ்வரனின் ஒளிப்பதிவு கலர்புல்
கணேஷ் சந்திரசேகரனின் இசை படத்தின் கதைக்கு ஓட்டம்.
இயக்குனர் ஜெய் சங்கர் தனது இயக்கத்தில் சற்று மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றியது. க்ளைமாக்ஸ் காட்சியில் பெண்களுக்காக வைத்திருந்த ’டச்’ – நச்
க்ளைமாக்ஸில் வைத்திருந்த செண்டிமெண்டை ஆங்காங்கே வைத்திருந்தால் சற்று ரசித்திருக்கலாம்.
வேட்டைநாய் – வீரியமில்லை





