உலக அரங்கில் பல விருதுகளை வென்ற திரைப்படம் என்ற பெருமையை தூக்கிச் சுமந்து நிற்கிறது இந்த “சின்னஞ்சிறு கிளியே”.
படத்தில் அப்படி என்ன கதை இருக்கிறது என்று பார்த்து விடலாமா.?
கதைப்படி….
கதையின் நாயகன் செந்தில்நாதன். பிரசவத்தில் தனது மனைவியை இழந்து மகளை கையில் ஏந்துகிறார்.
தாயில்லாததால், மகளின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறார். இவரது குடும்பம் இயற்கை வைத்தியத்தில் சிறந்தவர்கள். இயற்கை உணவகமும் நடத்தி வருகிறார்கள்.
ஒருநாள் கோவில் திருவிழாவில் தனது மகளை தொலைத்து விடுகிறார் செந்தில்நாதன். சில மணி நேரங்களில் கிடைத்தாலும் மகளின் முதுகெலும்பிலிருந்து மஜ்ஜையை ஒரு மர்ம கும்பல் திருடியதை அறிகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை.
பொறுப்புள்ள அப்பாவாக மட்டுமல்லாமல் பொறுப்பான மனிதனாகவும் காட்சிக்கு காட்சி மனதில் நிலைத்து நிற்கிறார் செந்தில்நாதன். மகள் மீது காட்டும் பாசத்தை அளவில்லாமல் கொடுப்பதால் அளவில்லாமல் நம்மையும் ரசிக்க வைத்துள்ளார் செந்தில்நாதன்.
அனைவரின் மனதிலும் அழகான தேவதையாக தெத்துப் பல் அழகோடு மனதில் பதிகிறார் நாயகியாக வரும் சான்ட்ரா நாயர்.
பாண்டியனின் ஒளிப்பதிவு கிராமப்புற அழகை கண்முன்னே நிறுத்தியது பாராட்டுக்குறியது.
மஸ்தான் – காதர் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான்.
கமர்சியல் பக்கம் செல்லாமல் இயற்கையை தூக்கி பிடித்த காரணத்திற்காகவே இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியனை வெகுவாக பாராட்டலாம்.
விருதுகளுக்கு உரித்தான படம் தான் ..
சின்னஞ்சிறு கிளியே – இயற்கை என்ற காதலை அனைவருமே ரசிக்கலாம்…