![](https://tamilveedhi.com/wp-content/uploads/2023/07/DD-returns-movie-review.jpg)
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “DD Returns”.
தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதால், மூன்றாம் பாகமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
கதைப்படி,
பாண்டிச்சேரியில் மிகப்பெரும் தாதாவாக இருக்கும் பெப்சி விஜயனின் மகனாக வருகிறார் கிங்க்ஸ்லி. இவருக்கும், நாயகி சுரபியின் சகோதரிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில், திருமணத்தன்று சுரபியின் சகோதரி ஓடிவிட, அவருக்கு பதிலாக சுரபியை கிங்க்ஸ்லிக்கு மணமுடிக்க ஏற்பாடுகளை செய்கிறார் பெப்சி விஜயன்.
அச்சமயத்தில், சுரபியின் காதலனாக வரும் சந்தானம், கல்யாண மாப்பிள்ளையாக வரும் கிங்க்ஸ்லியை கடத்தி விடுகிறார். அதே சமயத்தில், பெப்சி விஜயனின் வீட்டில் இருக்கும் பல கோடிக்கணக்கான பணத்தையும் நகையையும் ஒரு கும்பல் திருடி விடுகிறது. அந்த பணம் சந்தானம் கைகளில் சிக்கி விடுகிறது.
பணத்தை ஊருக்கு வெளியில் இருக்கும் பங்களா ஒன்றில் வைத்துவிடுகிறார்கள் சந்தானம் டீமில் இருக்கும் மாறன் மற்றும் சேது.
பணத்தை எடுப்பதற்காக உள்ளே செல்கிறது சந்தானம் & டீம். அந்த பங்களாவிற்கு ஏற்கனவே ஊர்காரர்கள் அடித்து எரித்துக் கொல்லப்பட்ட ஆங்கிலோ இந்தியன் குடும்பம் ஆவியாக சுற்றி வருகிறது. உள்ளே வரும் சந்தானம் & டீமை கேம் மரண விளையாட்டு ஒன்றை விளையாடி ஜெயித்தால் மட்டுமே உயிரோடு வெளியே செல்ல முடியும் என்கிறது அந்த ஆவிகள்.
இதனால், அந்த கேமை விளையாட ஆரம்பிக்கிறார்கள். அந்த கேமை விளையாடி ஜெயித்து உயிரோடு அந்த குழு வெளிவருகிறதா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சந்தானத்திற்கு மிகப்பெரும் வெற்றிப்படமாக இது அமைந்துள்ளது என்பதை நிச்சயமாக கூறலாம்.. நடிப்பிலும், அடிக்கும் டைமிங்க் கெளண்டர்களிலும் தனித்துவமாக நிற்கிறார். காதல், காமெடி, பைட் என பல கோணங்களில் தனது நடிப்பை தனக்கான பாணியில் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
அழகாக வந்து ஆங்காங்கே தனது நடிப்பிலும் முத்திரை கொடுத்திருக்கிறார் சுரபி. படத்திற்கு மிகப்பெரும் பலமே, மொட்டை ராஜேந்திரன், கிங்க்ஸ்லி, மாறன், சேது, தங்கதுரை இவர்கள் தான்.
படத்தில் ஒரு இடத்தையும் விடாமல் கிடைக்கும் இடத்திலெல்லாம் காமெடி சில்லரைகளை சிதறவிட்டிருக்கிறார்கள்..
ஆஃப்ரோவின் இசை மற்றும் தீபக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. மோகனின் கலை படத்தை அடுத்தகட்டத்திற்குச் செல்ல பெரிதாக கைகொடுத்துள்ளது. முக்கியமாக, அந்த பங்களாவிற்குள் அமைத்த கேம் செட் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.
கதை பெரிதாக இல்லை என்றாலும், இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருப்பதற்கு நாங்க கேரண்டி என்ற ஒரேநோக்கில் மட்டுமே இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
குடும்பத்தோடு சென்று இப்படத்தை கண்டு ரசிக்கலாம்..
டிடி ரிட்டர்ன்ஸ் – வருட ப்ளாக் பஸ்டர் லிஸ்டில் இணைந்து விட்டது…