புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட கிராமம் தான் கீழ் ஏம்பல். மணமேல்குடி வட்டத்தைச் சார்ந்தது.
கடந்த 30 வருடங்களாக மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியின்றி இக்கிராமத்து மக்கள் தவித்து வருகின்றனர். தண்ணீருக்காக சில கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் அவலத்திற்கு அக்கிராமத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உங்களது கிராமத்திற்கு நான் மின்சார மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருகிறேன் என்று ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஐஸ்வரியா மலையரசன் பத்திரத்தில் உறுதிமொழி எழுதி கொடுத்துள்ளார்.
தேர்தலில் ஐஸ்வரியா மலையரசன் வென்று ஊராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தட்டி கழித்து வருகிறாராம் ஐஸ்வரியா மலையரசன்.
இதனால், அக்கிராமத்து மக்கள் கொதித்து போய் உள்ளனர். இச்செய்தியை அறிந்த அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கீழ் ஏம்பல் கிராமத்தின் தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர். அது தவறும் பட்சத்தில் கிராமத்திற்கு ஆதரவாக விரைவில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தவும் நாம் தமிழர் கட்சியினர் முடிவு எடுத்துள்ளனர்.