Spotlightசினிமா

‘இம்மார்டல்’ வெற்றி விழா கோலாகலம்; ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘இம்மார்டல்’.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ‘இம்மார்டல்’ படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு

விழாவின் முக்கியமான தருணமாக, படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு உயர்தர கைக்கடிகாரங்களை பரிசளித்தார்.

அதோடு நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிகழ்வு விழாவில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

“படக்குழுவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி” – தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ‘இம்மார்டல்’ வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்ட படம் என்றும், குறிப்பாக CG மற்றும் மற்ற தொழில்நுட்ப அம்சங்களில் எந்த சமரசமும் இல்லாமல் படத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

படம் தொடங்கியது முதல் வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜிவி பிரகாஷுக்கு நன்றி தெரிவித்த அவர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் படக்குழுவுடன் இணைந்து புரமோஷன் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதாகவும், பின்னர் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளும் பெரிய திரைகளும் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

‘இம்மார்டல்’ வெற்றிக்கு படக்குழுவினர், ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு முக்கிய காரணம் என்றும் அவர் நன்றி தெரிவித்தார்.

சக்திவேலன்: “ஷோ பை ஷோ வசூல் அதிகரித்தது”

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பேசிய சக்திவேலன், ‘இம்மார்டல்’ படத்திற்கான வரவேற்பு முதல் நாளிலிருந்தே தொடர்ந்து அதிகரித்ததாக தெரிவித்தார்.

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், தொடர்ந்து ஷோ பை ஷோ வசூல் அதிகரித்ததாகவும் கூறினார்.

ஜிவி பிரகாஷுடன் இதுவரை ஏழு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அந்த ஏழு படங்களுமே தனக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜிவி பிரகாஷின் உழைப்பு, சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, CG மற்றும் visual quality ஆகியவை படத்தின் வெற்றிக்கு பெரிய பலம் என்றும் பாராட்டினார்.

“நமக்கும் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை கிடைத்தது”

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ‘இம்மார்டல்’ படத்திற்கு கிடைத்த பாராட்டுகள் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாக தெரிவித்தார்.

ஐடி துறையை விட்டு சினிமாவுக்கு வந்த தனக்கு சில நேரங்களில் இந்தத் துறையில் தொடர வேண்டுமா என்ற சந்தேகம் வந்ததாகவும், ஆனால் இப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்ததாகவும் கூறினார்.

மேலும் ‘இம்மார்டல்’ குழுவினர் மீண்டும் இணைந்து முற்றிலும் வித்தியாசமான ஜானரில் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஜிவி பிரகாஷ் நன்றி

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தார்.

‘இம்மார்டல்’ டிரெண்டிங்கில் வந்ததை பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் காண முடிந்ததாகவும் கூறினார்.

வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கிய படம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள் மற்றும் கூடுதல் காட்சிகளாக விரிவடைந்ததற்காக சக்திவேலனுக்கு நன்றி தெரிவித்தார்.

CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, தரத்தில் எந்த சமரசமும் செய்யாத தயாரிப்பாளரின் நம்பிக்கைக்கும் பொறுமைக்கும் இந்த வெற்றி கிடைத்திருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் பாராட்டினார்.

சாம் சி.எஸ்.: “படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே இருந்தது”

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், ‘இம்மார்டல்’ நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை படத்தை பார்த்த தருணத்திலிருந்தே இருந்ததாக தெரிவித்தார்.

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை மற்றும் பிரம்மாண்டமான மேக்கிங் மட்டும் போதாது என்றும், அதில் பணியாற்றும் அனைவரின் நேர்மையான உழைப்பும் positive energy-யும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

படத்திற்காக பொறுமையுடன் உழைத்த தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா நெகிழ்ச்சி

இயக்குநர் மாரியப்பன் சின்னா, தனது முதல் திரைப்படமான ‘இம்மார்டல்’ மக்களிடம் சென்றடைவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு மிகப்பெரிய காரணம் என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், VFX குழு, ஸ்டண்ட் குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

படக்குழுவினரின் நன்றி

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் ராஜேஷ், நடிகர் குமார் நடராஜன், நடிகை மிருதுளா உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.

குறிப்பாக CG, VFX, பின்னணி இசை மற்றும் visual presentation ஆகியவை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து வெற்றிகரமாக ஓடும் ‘இம்மார்டல்’

வித்தியாசமான ஃபேண்டஸி திரில்லர் கதைக்களம், ஜிவி பிரகாஷின் நடிப்பு, கயாது லோஹரின் கதாபாத்திரம், சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ‘இம்மார்டல்’, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button