இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்களை மானசிக குருவான ஏற்றுக் கொண்ட “டூ” பட இயக்குனர் திரு.ஸ்ரீராம் பத்மநாபன் அவர்களின் படைப்பில் உருவாகியுள்ள மல்லிகா லாட்ஜ் நம்பியார் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், கேபிள் சங்கர், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, ஜெகன், ராகேஷ், ஹலோ எப் எம் பாலாஜி, ஜுனியர் விகடன் தமிழ்மகன் , உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.
இவ்விழாவில் பேசிய லொள்ளு சபா ஜீவா, ‘ நான் தீவிரமான ரஜினி ரசிகன் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். நான் சிறு வயதில் ரஜினி சார் வீட்டிற்கு பல முறை போன் செய்து அவரிடம் பேசுவதற்கு முற்பட்டிருக்கிறேன். ஆனால், என்னால் அவரிடம் பேச முடியவில்லை. ஒருமுறை நம்பியார் குரலில் போன் செய்து, ”நான் நம்பியார் பேசுறேன், ரஜினி இருக்காங்களா.?” என்றேன், மறுமுனையில் பேசியவர் என்னை திட்டிவிட்டு போனை கட் செய்தார்.
பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். அது தான் எனது முயற்சியும் வெற்றியும். அதுபோல் தான் இயக்குனர் ஸ்ரீராமும் பல வருடங்கள் சினிமா உலகில் போராடி வருகிறார். அவருக்கான ஒரு இடம் இருக்கிறது. அதை அவர் சீக்கிரமாக அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என்றார்.
தொடர்ந்து இவ்விழாவில் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள கண் சிமிட்டும் நேரம் என்ற குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகிவரும் ”முந்தானை முடிச்சி 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.